கோதை என்பது சாத்தன் சாத்தி மருதி செவியிலி என்றாற்போல ஈற்றான் பால் விளக்குதல் இன்றிப் பொதுவாய் நிற்றலின் பன்மை சுட்டிய பெயராம் என்க.
அமைதி
‘ஆண்மை பெண்மை’ நன். 283 என்ற நூற்பா உரையில் கோதை என்பதனை ஒருமை முதற்பெயருக்கு உதாரணம் காட்டிய முனிவர் ஈண்டு அதனைப் பன்மை சுட்டிய பெயர் என்று குறிப்பிடுவதன் பொருத்தத்தை ஆய்க.
கோதை ஒருமை இயற்பெயராதல் இன்று காணும் உலகவழக்கம் கண்டும் உணர்க.
ஒத்த நூற்பாக்கள்
‘இருதிணைச் சொற்கும் ஓரன்ன உரிமையின் திரிபுவேறு படூஉம் எல்லாம் பெயரும் நினையுங் காலைத் தத்தம் மரபின் வினையோ டல்லது பால்தெரி பிலவே.’
‘இயற்பெயர் சினைப்பெயர் சினைமுதற் பெயரே முறைப்பெயர்க் கிளவி தாமே தானே எல்லாம் நீயிர் நீஎனக் கிளந்து சொல்லிய அல்ல பிறவும் ஆஅங்கு அன்னவை தோன்றின் அவற்றொடுங் கொளலே.”