இது மேற்கூறிய பெயர் பதினான்கனுள் பன்மை சுட்டிய பெயர் ஒழித்து ஒழிந்தவை இருதிணையும் பற்றிப் பால் உணர்த்துமாறு கூறுகின்றது. இ-ள்: ஆண்மை சுட்டியபெயர் நான்கும் பெண்மை சுட்டியபெயர் நான்கும் ஒருமை சுட்டியபெயர் மூன்றும் பன்மைசுட்டியபெயர் மூன்றும் ஆகிய பெயர் பதினான்கனுள் ஒரு பெயரே இருதிணை இடத்தும் தான் உணர்த்தற்கு உரிய பால்களை உணர்த்தும், பன்மை சுட்டிய பெயர் மூன்றும் அல்லாத இடத்து என்றவாறு. வரலாறு: சாத்தன் வந்தது வந்தான்- முடவன் வந்தது வந்தான்- முடக் கொற்றன் வந்தது வந்தான்- தந்தை வந்தது வந்தான்- என ஆண்மை சுட்டிய பெயர் நான்கும் அஃறிணை ஆண் ஒன்றனையும் உயர்திணை ஒருவனையும், சாத்தி வந்தது வந்தாள்- முடத்தி வந்தது வந்தாள்- முடக்கொற்றி வந்தது வந்தாள்- தாய் வந்தது வந்தாள்- எனப் பெண்மை சுட்டிய பெயர் நான்கும் அஃறிணைப் பெண் ஒன்றனையும் உயர்திணை ஒருத்தியையும், கோதை வந்தது வந்தான் வந்தாள்- செவியிலி வந்தது வந்தான் வந்தாள்- கொடும்புற மருதி வந்தது வந்தான் வந்தாள்- என ஒருமை சுட்டிய பெயர் மூன்றும் அஃறிணை ஒருமையினையும் உயர்திணை ஒருமையினையும் உணர்த்தியவாறு காண்க. முடம் சினைப்பெயர் விகாரம் ஆதலின், சினையாயிற்று. நுந்தை- எந்தை- என்பனவும், ஆய்- யாய் என்பனவும் முறையே ஆண்மை முறைப்பெயராயும் பெண்மை முறைப்பெயராயும் வரும் எனக்கொள்க. தம்பி- நும்பி - எம்பி, தங்கை- நுங்கை எங்கை என்பனவும் அவ்விரு கூற்று முறைப் பெயருள் அடங்கும். 27 |