முற்றுச்சொல்லின் இலக்கணம் மற்றுச்சொல் நோக்காது பொருள்முற்றி நின்று பெயர்கொண்டு முடிதல் என்பதும், அவ்வினைமுற்று இருபத்தேழு வகைப்படும் என்பதும், அம்முற்று ஆண் பெண் பலர் ஒன்று பல என்ற பால்களைக்காட்டும் ஈறுகொண்டு படர்க்கை வினையாகும்வழி அதன் விகுதிகள் இவை என்பதும், தன்மை ஒருமை- தன்மைப்பன்மை- முன்னிலை ஒருமை - முன்னிலைப்பன்மை- வினைமுற்றாகும்வழி அதன் விகுதிகள் இவை என்பதும், மார்ஈறு- செய்கு செய்தும் என்ற வாய்ப்பாட்டு வினைமுற்றுக்கள்- யார் எவன் என்னும் குறிப்பு முற்றுக்கள் என்பனவற்றின் இலக்கணங்கள் இவை என்பதும், வியங்கோள் ஈறுகள் இவை என்பதும், ஐம்பால் மூவிடங்களுக்கும் பொதுவான முற்றுக்கள் இவை என்பதும் முறையானே விளக்கப்பட்டுள்ளன. அடுத்து, செய்யும் என்னும் முற்றின் இலக்கணமும், பெயரெச்ச வினையெச்சங்களின் இலக்கணமும் இடம் பெற்றுள்ளன. பின், பெயரெச்ச வாய்பாடுகளும், செய்யும் என்னும் சொல்பற்றிய சிறப்புச் செய்திகளும் கூறப்பட்டுள்ளன. வினையெச்ச முடிபும், வினையெச்ச வாய்பாடுகளும், அவை வினைமுதல்வினையும் பிறவினையும் கொண்டு முடியுமாறும், சினைவினைமுடிபும், முதல்வினை முடிபும், வினைக்குறிப்பொடு முடிவுழி ஏற்படும் நிலையும், முற்றெச்சங்களின் இயல்பும் விளக்கப் பெற்றுள்ளன. இவ்வியலிலுள்ள நூற்பாக்கள் இருபத்து நான்கே. அவற்றுள் பல நன்னூலை ஒட்டியன. இயலமைப்பும் பெரும்பாலும் நன்னூலையொட்டியே உள்ளது. ஆனால் விரிவாக வரையப்பட்டுள்ள உரையில் தொல்காப்பிய வினையியற்கண் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் உரைத்த அரிய செய்திகள் பலவும் இயைபு பற்றி ஆண்டாண்டு மிடைப்பட்டுள்ளன. வினைபற்றிய தொல்காப்பிய எச்சவியற் |