சொற்கள் பகுபதம், பகாப்பதம் என்று இரு பிரிவின. பகாப்பதம் பிரிக்க முடியாதது. பகுபதம் பிரிக்கக் கூடியது. பகுபதக் கூறுகள் பகுதி, விகுதி, இடைநிலை சாரியை, சந்தி விகாரம் என்ற ஆறு தலைப்பில் அடங்கும். பகுதியாவது:- தன்னியல்பின் நிற்பது. இது பகுபதத்தின் முதலுறுப்பு ஆதலின் முதனிலை யெனவும் பெயர் பெறும். விகுதியாவது:- பகுதியின் பொதுவாய் இருக்கும் தன்மையை வேறுபடுத்தி ஒன்றற்கே சிறப்பாக உரியதாக்குவது. இது பகுபத இறுதி உறுப்பு ஆதலின் இறுதிநிலை யெனவும் பெயர்பெறும். இடைநிலையாவது:- பகுதிக்கும் விகுதிக்கும் இடையதாய்ப் பெரும்பாலும் காலம் காட்டி வினைக்கு இன்றியமையாது வேண்டப்படும் உறுப்பு. பெயரிடையும் இடைநிலை அருகி வரும். சாரியையாவது:- பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடைப்பட்டு ஓசை எளிமைக்காகவும் இனிமைக்காகவும் வருவது. சந்தியாவது:- பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே ஓசை விட்டிசைக்காமல் பொருந்துவதற் இடைவந்து புணரும் உறுப்பு. இவ்விடம் மாறி வருவதனை எழுத்துப்பேறு என்ப. விகாரமாவது:- பகுபதத்தின் பகுதிக்கண்ணும் சந்தி உறுப்பின்கண்ணும் ஏற்படும் வேறுபாடு ஆகும். பிறவுறுப்பிலும் சிறுபான்மை இது நிகழும். |