திணையும் பாலும் கலந்து வரும் தொடர்கள் முடிவு பெறுதல். 1. சிறப்பு : ‘திங்களும் சான்றோரும் ஒப்பர்’ என்று அஃறிணையும் (திங்கள்) உயர்திணையும் (சான்றோர்) கலந்து திங்கள் சிறப்பு உடையதால் உயர்திணை முடிபே பெற்றது. 2. இழிவு : ‘வடுகர், அருவாளர், வான், கருநாடர், சுடுகாடு, பேய், எருமை என்று இவையாறும்’ - இங்கு வடுகர் முதலிய உயர்திணைப் பெயர்கள் சுடுகாடு முதலிய அஃறிணைப் பெயர்களோடு கலந்து இழிவு காரணமாக ‘இவை’ என்று அஃறிணைச் சொல்லால் குறிக்கப்பெற்றுள்ளது. 3. மிகுதி : ‘பார்ப்பார், தவரே சுமந்தார், பிணிப்பட்டார். மூத்தார், இளையார், பசுப்பெண்டிர், என்று இவர்கட்கு’ - இங்கு பசு என்ற ஒரு அஃறிணைச் சொல்லும் பார்ப்பார் முதலியன உயர்திணைச் சொல்லும் கலந்திருந்தாலும் உயர்திணைச் சொற்கள் மிகுதியாக இருப்பதனால் ‘இவர்’ என்று உயர்திணைச் சொல்லாற் குறிக்கப்பட்டுள்ளது. இது நன்னூல் 375, 376, 378, ஆகிய சூத்திரங்களோடு ஒத்தது; ஆனால் இலக்கண விளக்கம் 295, 296, 297, 298, 299, ஆகிய சூத்திரங்களைத் தழுவியது. ஏனெனில் நன்னூலார் திணை - பால் வழுவிற்கு உவப்பு, உயர்வு, சிறப்பு, செறல், இழிவு, என்ற ஐந்து காரணம் (379) கூற இலக்கண விளக்கத்தார் சொன்னோக்கு’ என்ற மற்றொன்றையும் சேர்த்துக் கூறியதனையே (இ.வி. 299) இவர் பின்பற்றியுள்ளார். பாட விளக்கம் : மூலத்தில் (4வதுவரி) திணையால் (விரவில்) என்று இருந்த பாடம் ‘திணைபால்’ என்று திருத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. |