சுவாமிநாதம்98சொல்லதிகாரம்

இலக்கணக்கொத்திற்கும் சுவாமிநாதத்திற்கும் வேறுபாடு அமைந்துள்ளது.
இலக்கணக்கொத்து பொருள் அடிப்படையில் ஒவ்வொரு பொருளும்
என்னென்ன வேற்றுமையில் வரலாம் என்று தொகுத்துக் கூறுவதைச்
சுவாமிநாதம் ஒவ்வொரு வேற்றுமையும் என்னென்ன பிற வேற்றுமையில்
வரலாம் என்று மாற்றிக் கூறியுள்ளது. இறுதிப்பகுதியில் இலக்கணக்கொத்து
இருவகை மயக்கம் கூற (23), சுவாமிநாதம் மூவகை மயக்கம் கூறுவதும்
நோக்கத்தக்கது.

46. த,ந,நு,எ, எனவைகிளையின் ன,ள,ர,ஈற் றனவுந்,
தாந்தானும் சுட்டுவினாப் பெயரும்விளி ஏலா;
அனையவைகள் உறிற் சிலயாம் ஒன் றிடத்துஒன்றே யதியாம்,
உருபும்பய னிலையும்இயை தல்இயை பிலதாய்
நனி மயங்கல் பொருண்மயக்கம்; உருபுமயக்கம் தா(ம்)நன்
முதல்ஐயுறிற் சினை கண்உறு(ம்); முதல்அது உற்றாற்
சினைஐயே உறும்;வெவ்வேறு இலஉரைப்போர் குறிப்பாஞ்
சினைமுதல்கள்; பிண்டமும்அற் றாம்வினவும் பொழுதே.
 
 

(13)

 

விளியேலாப் பெயர்களும் வேற்றுமை மயக்கமும் உணர்த்துகின்றது.

உரை : த, ந, நு, எ என்பவற்றை உறுப்பாக உடைய ன, ள, ர
இறுதியில் உடைய சொற்களும், தாம், தான், சுட்டுப்பெயர், வினாப்பெயர்களும்
விளி ஏற்று வரா; இப்பெயர்கள் ‘கள்’ விகுதிபெற்று வந்தால் சில சொற்கள்
விளி கொள்ளுதலும் உண்டு. உருபும், பயனிலையும் இயைபோடு பொருந்தி
வருதல், இயைபு இல்லாமல் பொருந்தி வருதல் என்பன பொருண் மயக்கம்,
உருபு மயக்கம் எனப்படும். முதல் ‘ஐ’ உருபு பெற்றால் சினை ‘ஐ’ உருபு
ஏற்கும், முதல், ‘அது’ உருபு பெற்றால் சினை ‘ஐ’ உருபு ஏற்கும். முதல்,
சினை என்பன வேறு இல்லை. ஒரு பொருளே உரைப்போர் குறிப்பை
ஒட்டியே சினையும் முதலுமாக அமையும். பிண்டப் பொருளும்
அத்தன்மையதே.