பக்கம் எண் :

56 பாசவதைப் பரணி

350.

அள்ளி யவுண ருயிர்குடித்த
      அயிலோன் புயபூ தரமனைத்தும்
வள்ளி படர மலர்பறித்துத்
      தொடுத்தே னின்று விடுத்தேனோ.

(83)
 

  

351.

மதியா ரான கலாதரனார்
      மயங்கிக் குருவின் மனையாளைத்
துதியா ரிமையார் பலர்காணத்
      தோயப் பொருதார் பிறரேயால்.

(84)
  

352.

நன்று போல முன்னெய்தி
      நஞ்சு போல நனிகாந்திக்
கொன்று ஞாளி யெனப்பெருமால்
      கொடுப்பேன் வென்று படுப்பேனால்.

(85)
   

353.

பெற்றாள் வயினுந் தன்வயிற்றுப்
      பிறந்தாள் வயினு மோருதரத்
துற்றாள் வயினு முறவுள்ளம்
      ஓர்வா ளியினா லுடைப்பேனால்.

(86)
   

354.

எண்ணு மாறே துணிவிப்பன்
      இசையார் தமையு மிசைவிப்பன்
நண்ணு மாறே முன்னொடுபின்
      நாடா வண்ண நலிவேனால்

(87)
   

355.

சாந்தங் கொண்ட தபோதனரும்
      தடமென் முலையார் தம்பிறகே
காந்தங் கொண்ட விரும்பென்னக்
      கவ்விச் சுழலக் கலக்குவனால்.

(88)
   

356.

தண்ணென் மதியை யழலென்றும்
      சாந்த மதனை விடமென்றும்
வண்ண மலரை யரமென்றும்
      மயங்கத் தியங்க மலைப்பேனால்.

(89)
   

357.

கொந்தார் மலர்ப்பூந் தாதளைந்து
      குளிர்ந்து மெல்லக் குலவிவரு
மந்தா நிலமாந் தேர்கடவின்
      மாற்ற வெனையா ராற்றுவரே.

(90)

350. அயிலோன் - முருகக் கடவுள்.