பக்கம் எண் :

8. கூளி கூறியது 61

393.

அணியாக முடிசூடி யகல்விசும்பு புரப்போனைப்
பணியாகப் பணித்தவனு மென்பணியிற் பயின்றோனால்.

(126)

 

அஞ்ஞன் கோபனைப் புகழ்தல்.

 

394.

வெங்கோபன் றானுமிள வேனில்வேள் போலுநெடும்
பொங்கோத நிலத்தென்னாப் புரவலனும் புகழ்ந்தனனால்

(127)
 

கோபன் மீண்டும் கூறல்

 

395.

போலுமென வறிவுற்ற புரவலனார் புகழ்தலுமே
சாலுமிது சாலுமெனச் சலனாணிச் சாற்றுவனால்.

(128)
  

396.

வென்றிடினுங் காமனையே வெல்வதன்றி மற்றெனைத்தாம்
பொன்றிடினும் வெல்லவொரு பூதரையுங் கண்டிலனால்.

(129)
   

397.

அடுங்காமன் பொடியாக வழல்கொழிக்கு மொருகுளத்தார்
கொடுங்கோபற் குடைந்தன்றோ கொடிமதின்மூன் றெரித்தனரால்.

(130)
   

398.

வீரத்தி னெனக்குடைந்தோ வேள்கணைக்கோ வேதமுனி
தாரத்தின் சிரந்துணிப்பத் தனையனுடன் சாற்றியதால்.

(131)
   

399.

வேளைவென்ற வீடுமனார் வீறுபதி னாயிரந்தேர்
ஆளைவென்று சோடவிழ்ப்ப வழன்றதுநீ ரறியீரால்.

(132)
   

400.

சேர்ந்தாரை யெழிப்பதுசெந் தீயதுதா னிகரோநான்
சார்ந்தாரை யழித்தவர்தஞ் சார்பினையு மழிப்பேனால்.

(133)
   

401.

நகையுமுவ கையுமழிக்கு நானொழிய வேறுசில
பகையுமட வேண்டுமோ பவங்கடியும் படிவர்க்கே.

(134)

393. புரப்போன் - நகுஷன். பணியாக - பாம்பாகும்படி. பணித்தவன் - அகத்திய முனிவர்.

395. சலன் - கோபன்.

397. குளத்தார் - நெற்றியையுடையவர். அழல் கொழிக்கும் குளத்தார் என்றது ஒரு நயம்.

398. வேத முனி - ஜமதக்கினி. தனையன் - பரசுராமர்.

400. “சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி யினமென்னும், ஏமப்புணையைச் சுடும்” (குறள். 306) சார்பென்றது முற்றத் துறந்து தவஞானங்களாற் பெரியராய்க் கேட்டார்க்கு உறுதி மொழிகளை இனியவாகச் சொல்லுவாரை.

401. பவம் - பிறப்பு. படிவர் - துறவிகள். “நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்திற், பகையு முளவோ பிற” (குறள். 304) என்பதும், ‘துறவாற் புறப்பகையிலராயினும் உட்பகையாய் நின்று அருண் முதலிய நட்பினையும் பிரித்துப் பிறவித் துன்பமுமெய்து வித்தலான், அவர்க்குச் சினத்தின் மிக்க பகையில்லையாயிற்று’ என்ற அதன் விசேட உரையும் இங்கே அறிதற்குரியன.