பக்கம் எண் :

214தொல்காப்பியம்-உரைவளம்

உ-ம் : பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ - என இசைநிறை நான்கடுக்கி வந்தது. தீத் தீத் தீ-என விரை சொல் மூன்றடுக்கி வந்தது.

அடுக்கு என்னும் பெயரே ஒருசொல் இருமுறையடுக்கி வருதலைக் குறிக்குமாதலின், இருமுறைக்கு மேலாக மூன்று நான்கு முறை அடுக்கி வருவனவற்றிற்கு மட்டும் ஆசிரியர் இச்சூத்திரங்களால் வரையறை கூறினார். இசைப்படு பொருளும் விரை சொல்லடுக்கும் நான்கும் மூன்றுமாய் அடுக்கும் எனவே அசை நிலையடுக்கு இரண்டாய் வரும் என்பது தானே பெறப்படும்.

ஆதி

(விரைசொல்...............................வரம்பாகும்.)

விரைவுப் பொருள் குறித்து அடுக்கி உரைத்தலுக்கு மூன்று முறையே வரம்பு.

போ போ போ எனப் புகன்று நின்றான்-சரி.

போ போ போ எனப் எனப்புகன்று நின்றான்-நான்கு முறை தவறு.

அசை நிலையடுக்கு

419. கண்டீ ரென்றா *கொண்டீ ரென்றா
  சென்ற தென்றா போயிற் றென்றா
வன்றி யனைத்தும் வினாவொடு சிவணி
நின்றவழி **யிசைக்குங் கிளவி யென்ப.      (29)
  
 (கண்டீர் என்றா கொண்டீர் என்றா
சென்றது என்றா போயிற்று என்றா
அன்றி அனைத்தும் வினாவொடு சிவணி
நின்றவழி இசைக்கும் கிளவி என்ப.)

* கேட்டீரென்றா-பாடம்-தெய்.

** யசைக்கும்-சேனா, நச். பாடம். இளம்பூரணர் பாடம் இசைக்கும் என இருப்பினும் பொருள் அசைக்கும் என்பதற்கேற்ப அமைந்துள்ளது.