செந்தமி்ழ் சேர்ந்த நாடென்றமையால், பிறநாடாகல் வேண்டும் என்பார் உதாரணம் காட்டுமாறு :- “ கன்னித் தென்கரைக் கடற்பழந் தீபம் கொல்லங் கூபகம் சிங்களம் என்னும் எல்லையின் புறத்தவும் கன்னடம் வடுகம் கலிங்கம் தெலுங்கம் கொங்கணம் துளுவம் குடகம் குன்றகம்” என்பன. “குடபா லிருபுறச் சையத்துட னுறையுபு கூருந் தமிழ்திரி நிலங்களும், முடியுடை மூவர் இருநில ஆட்சியின் அரசுமேம்பட்ட குறுநிலக் குடுமிகள், பதின்மரும் உடனிருப்பிருவரும் படைத்த, பன்னிருதிசையில் சொன்னய முடையவும், என்பது அகத்தியச் சூத்திரம். இதனுள் எல்லையின் புறத்தவும், தமிழ்திரி நிலங்களுமாகிய பன்னிரு அரசரும் படைத்த பன்னிரு தேயத்தினும் தமிழ்ச் சொல்லாதற்கு விருப்புடையனவும் என்றமையானும், “தமிழ்கூறு நல்லுலகத்து, வழக்குஞ் செய்யுளுமாயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி” என நிறுத்துப் பின்னும் “செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்து நூல்கண்டு” என ஓதிய வதனால், சிவணிய நிலமாவது எல்லை குறித்த நிலத்தைச் சார்ந்த நிலம் என வேண்டுதலானும், பன்னிரு நிலமாவன :- குமரியாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபமும் கொல்லமும் கூபகமும் சிங்களமும் சையத்தின் மேற்குப்பட்ட கொங்கணமும் துளுவமும் குடகமும் குன்றகமும், கிழக்குப்பட்ட கருநடமும் வடுகும் தெலுங்கும் கலிங்கமும் என்று கொள்ளப்படும். இவற்றுள் கூபகமும் கொல்லமும் கடல் கொள்ளப்படுதலின், குமரியாற்றின் வடகரைக்கண் அப்பெயரானே கொல்லமெனக் குடியேறினார் போலும். பஞ்சத் திராவிடம் எனவும் வடநாட்டார் உரைப்ப வாகலான் அவையைந்தும் வேங்கடத்தின் தெற்காதலும் கூடாமையுணர்க அந்நிலத்து வழங்குஞ் சொல்லாகிச் செஞ்சொல்லின் வேறுபட்டுச் சான்றோர் செய்யுளகத்து வருவன நீக்கப்பட, எ-று. |