பக்கம் எண் :

54தொல்காப்பியம்-உரைவளம்

நினையத் தோன்றும் என்றதனால் 3மொழி மாற்றுப் போல நிற்கும் நிரனிறையும் உள என்பது.

4“களிறும் கந்தும் போல நளிகடற்
கூம்பும் கலனுந் தோன்றும்”

எனவரும். களிறும் கந்தும் முறையானே கலனும் கூம்பும் எனற்பால; அவ்வாறு கூறாது ‘கூம்பும் கலனும்’ என்றமையான் மயக்க நிரனிறையாயிற்று என்பது.

சேனா

இ-ள் : அந்நான்கினுள், நிரல் நிறையாவது வினையானும் பெயரானும் ஆராயத்தோன்றிச் சொல்வேறு நிற்பப் பொருள் வேறு நிற்றலாம், எ-று.

தொடர் மொழிப் பொருள் முடிக்குஞ் சொற்கண்ண தாகலான் முடிக்குஞ் சொல்லைப் பொருள் என்றார்.

வினையினும் பெயரினும் என்றதனான் வினைச்சொல்லான் வருவதூஉம், பெயர்ச் சொல்லான் வருவதூஉம், அவ்விரு சொல்லான் வருவதூஉம், என நிரனிறை மூன்றாம்.

உ-ம் :“மாசு போகவும் காய்பசி நீங்கவும்
 கடிபுனல் மூழ்கி அடிசில் கைதொட்டு”

என, முடிவனவும் முடிப்பனவுமாகிய வினைச்சொல் வேறு வேறு நிற்றலின், வினை நிரனிறையாயிற்று. அவை மாசுபோகப் புனல் மூழ்கி, பசிநீங்க அடிசில் கைதொட்டு என இயையும்.

“கொடி குவளை கொட்டை நுசுப்பு உண்கண்மேனி” என, முடிவனவும் முடிப்பனவுமாகிய பெயர்ச்சொல் வேறு வேறு நிற்றலின் பெயர் நிரல்நிறையாயிற்று. அவை நுசுப்புக் கொடி, உண்கண் குவளை, மேனி கொட்டை என இயையும்.


3. இது எதிர் நிரல் நிறை எனப்படும். மயக்க நிரல் நிறையும் ஆம்.

4. ‘தோன்றல் மறந்தோர் துறை கெழு நாட்டே’ என்னுமடியுடன் இப்பாடல் முடிவு பெறுகிறது சேனா வரையர் உதாரணத்தில்.