பக்கம் எண் :

பிரிக்கப்படாக் கிளைநுதற் பெயர்கள் சூ. 1487

சேனாவரையர், தங்கிளை, நங்கிளை, நுங்கிளை, எங்கிளை என்பனவற்றை ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாய் நிற்கும் என்றாரால் எனின், ஆசிரியர்,

‘தாமென் கிளவி பன்மைக் குரித்தே’       (பெயரி. 30)

‘யாம்நாம் எனவரூஉம் பெயரும்’       (பெயரி. 8)

என இவ்வதிகாரத்து எடுத்தோதிய பன்மைச் சொற்களை எழுத்ததிகாரத்துள் அவை எழுவாயும் பயனிலையுமாய் நிற்கும் வழித்திரியாது புணரும் என்று கூறி,

‘தாம் நாம் என்னும் மகர இறுதியும்’       (உருபியல் 16)

என்னுஞ் சூத்திரத்தான் உருபு ஏற்கும் வழித் திரிந்து புணரும் என்றுகூறி, நும் என்பதனை,

‘நும்மென் ஒருபெயர்       (புள்ளிமயங்கியல் 30)

என்னுஞ் சூத்திரத்தான் உருபு ஏற்குமாறு கூறி ‘அல்லதன் மருங்கின்’ என்னுஞ் சூத்திரத்தான் (புள்ளி ம. 31).

அஃது எழுவாயும் பயனிலையுமாய் நிற்கும் வழி ‘நீயிர்’ எனத்திரிந்து பன்மையாயே நிற்கும் எனவும் கூறிப் போந்தார் ஆதலின், ஈண்டும் அதற்கு ஏற்பத் தம்முடையகிளை, எம்முடைய கிளை எனப் பன்மை யுணர்த்துதல் அன்றி ஒருமை யுணர்த்தாமை யுணர்க. ஏனையவும் அன்ன.

‘தம் பொருள் என்ப தம் மக்கள்’       (குறள் 68)

எனவும்,

‘நம்மனோர்க்கே’       (மலைபடு. 402)

எனவும்,

“நும்ம னோருமற் றினைய ராயின்

எம்ம னோரிவண் பிறவலர் மாதோ” (புறம். 210) எனவும் இந்நான்கு சொல்லும் அம்முடிவு பெற்று, முதல்நிலை திரிந்து நின்று, பன்மைப் பொருள் உணர்த்தியவாறு காண்க.