பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை311

மெய்ப்பாட்டு வகையைப் பிரித்தலின், புறனே என்பதின் ஏகாரம் பிரிநிலை; அன்றி இசைநிரப்பும் அசை எனினும் அமையும்.

“எண்ணான்கு பொருளும் நானான்கென்ப” எனவே “எண்வகை” என்பது பெறப்படுமாதலின், “கண்ணி புறனே நானான்கு” என இடைப்புணர்த்துரைப்பானேன்? எனின், கூறுதும். உள் உணர்ச்சியளவில் தனிப்பிரித்து ஒருங்கெண்ணப்படும் முப்பத்திரண்டு பொருளும் புறத்தே மெய்ப்பாடாய்ப் புலனாதல் கொண்டே அறியப்படுதலானும், அவ்வாறு புலனாங்கால் அவை தனித்தனியே எள்ளற்குறி இளமைக்குறி பேதைமைக்குறி மடமைக்குறி என்றொவ்வொன்றும் வெவ்வேறாய்த் தனக்குரிய தனிக்குறியாற் றோன்றாமல், நந்நான்காய்ப் பண்ணைகூடி நகை - அழுகை - இளிவரல் - மருட்கை - அச்சம் - பெருமிதம் - வெகுளி - உவகை எனும் மெய்ப்பாடு எட்டுவகையால் மட்டும் தோன்றதலானும், இவ்வியல் நெறி குறித்தல் வேண்டி இவ்வாறு கூறப்பட்டதென்க. இன்னும், இச்சூத்திரம் சுட்டுவது இதுவேயென்பது, பின்னும் செய்யுளியலில் தொல்காப்பியரே அதன் உறுப்பாம் மெய்ப்பாட்டின் தன்மையை விளக்கியபின் அதையடுத்து “எண்வகை யியனெறி பிழையாதாகி, முந்துறக் கிளந்த முடிவினததுவே” எனக் கூறுதலானும், அதன் கீழ்ப் பேராசிரியரும் “மேற் கூறப்பட்ட மெய்ப்பாடே இது; அவை நந்நான்காம்” என உரைப்பதானும் தேறப்பெறும்.

இனி, “என்ப” என்றது பிற சூத்திரங்களிற்போல இயற்றமிழ்ப் புலவர் கொண்ட அடிப்பட்ட தமிழ்ச் செய்யுள் மரபிதுவென ஈண்டுச் சுட்டுவதன்றி, யாதொரு வேறு முதனூலும் அதன் கொள்கையும் குறிப்பதன்று. இச்சூத்திரப் பொருள் இதுவேயென்பது இதன்கீழ் இளம்பூரணர் தரும் குறிப்பானும் தெளிவாகும். அவர் குறிப்பாவது, “முப்பத்திரண்டாவன நகை முதலானவற்றுக் கேதுவாம் எள்ளல் முதலாக விளையாட்டீறாக முன்னெடுத் தோதப்படுகின்றன” என்பதாம்.

இச்சூத்திரத்தின் செம்பொருள் இதுவாகவும், பேராசிரியரும் பிறரும் ஆன்ற தமிழ் மரபும் தெளி சொற்குறிப்பும் முரண உரைகூறி மயங்க வைப்பர். பேராசிரியர் “சுவைப் பொருளும் அப்பொருள் விளைக்கும் சுவையுணர்வும், அவ்வுணர்வால் தோன்றும் உள்ளக்குறிப்பும், இக்குறிப்பின் வழி உடம்பின்கண் வரும் வேறுபாடாம் விறலுமாக நான்கெண்ணி அவற்றைச்