பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை347

தனிமை தாங்காத் தலைவி காதல் கைம்மிகத் தெருமருநிலையில் தன் ஆற்றாமை கூறத்துணிவாளாதலின், கையறவுரைத்தல் கடைசியில் கூறப்பட்டது. “பூவிடைப்படினும்” எனும் சிறைக்குடி ஆந்தையார் குறும்பாட்டில்,

“பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு
 உடனுயிர் போகுக தில்ல, கடனறிந்
 திருவே மாகிய வுலகத்
 தொருவே மாகிய புன்மைநா முயற்கே”

(குறுந். 57)

எனக் காப்புமிகுதிக்கண் தலைமகள் தோழிக்குத் தன் கையறவு கூறுவதறிக. இதுபோலவே, “காலையும் பகலும்” எனும் குறும்பாட்டில் (32) “வாழ்தலும் பழியே பிரிவு தலைவரினே” என அந்நிலையில் தலைவன் தன் கையறவு கூறுதலும் காண்க.

“இவளே,
அணியினும் பூசினும் பிணியுழந் தசைஇ,
பல்கிளை நாப்ப ணில்கிளை போல,
மொழிவகை யறியாள், பொழிகண் ணீர்துடைத்
தியானே கையற வலம்வரும்;
கூறாய் பெருமநிற் றேறு மாறே. ”

எனும் இலக்கண விளக்க மேற்கோள் பழம்பாட்டில் இங்குக் கூறிய மெய்ப்பாட்டுணர்வுகள் நான்கும் ஒருங்கமையத் தோழி கூறினமை காண்க.

இதில், ஒடு எண்ணிடைச் சொல்; ஏகாரம் இசைநிறை. எழுவாய் அவாய்நிலை.

சூத்திரம் : 19 
 அன்ன பிறவு மவற்றொடு சிவணி
மன்னிய வினைய நிமித்தம் என்ப.

கருத்து : இது மேலனவற்றிற்குப் புறனடையாய் அவற்றின் பொதுத் தன்மையுணர்த்துகிறது.

பொருள் :  அன்னபிறவும் அவற்றொடு சிவணி = மேற்கூறிய ஆறு கூறாமுணர்வுகளை ஒத்தபிற காதற்குறி