தித்தனுடைய முரசு முதலியவற்றோடு வெளிய சங்குகள் ஒலியாநிற்பச் சிறிய பனியுண்டாக வரிசையாக எடுக்கப்பட்ட விளக்குகளுடனே; கொளீஇய கையற வந்த பொழுதொடு - சென்று எதிர் கொள்ளுகின்ற பிரிந்துறை மகளிர் செயலறும்படி வந்த மாலைப்பொழுதிலே; மெய் சோர்ந்து அவல நெஞ்சினம் பெயர - மெய் சோர்ந்து வருந்திய மனத்தேமாகிப் பெயர்ந்து போகும்வண்ணம்; உயர்திரை நீடுநீர்ப் பனித்துறைச் சேர்ப்பன் - ஓங்கி யெழுகின்ற அலைகளையுடைய நீண்ட நீர்வடிவாகிய கடலின் குளிர்ந்த துறையையுடைய சேர்ப்பனது, ஓடு தேர் நுண் நுகம் நுழைத்த மா - ஓடுகின்ற தேரின் நுண்ணிய நுகத்திற் பூட்டப்பட்டுச் செல்லுகின்ற குதிரைகள் தாம்; பெறும் முது செல்வர் பொன் உடைப் புதல்வர் - முற்செய்த தவத்தாற் பெற்ற முதிர்ந்த செல்வரின் பொன்னணிகளையுடைய புதல்வர்; சிறுதோள் கோத்த செவ்அரிப் பறையின் கண் அகத்து எழுதிய குரீஇப் போல - சிறிய தோளில் மாட்டிய செவ்விதின் ஒலிக்கும் பறையின் கண்ணில் எழுதிய குருவி அடி படுதல் போல; கோல் கொண்டு அலைப்பப் படீஇயர் - கோலைக் கொண்டு அடிக்க அதனாலே துன்பப்படுவனவாக !; எ-று.
(வி - ம்.) பெருமுதிரென்ற பாடத்திற்குப் பெரிய முதிர்ந்த என்றவாறு.
கோயிலகத்து மாலையில் வாச்சியமொலிப்பித்தலை அம்மாலையை எதிர் கோடலாக உபசரித்தார். நுண்பனியரும்பு மாலையெனவே கூதிர்ப்பொழுதெனக் கருதலானே, இரவிடைமுயக்கம் இன்றியமையாதாயிற்று. இரவில் வெளிப்படையாகத் தங்கவேண்டின் வரைந்தன்றி இயலாமையின் வரைவுதோன்றக் கூறியதாயிற்று. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - குறிப்பினால் வரைவுகடாதல்.
(பெரு - ரை.) முரசு வெண்கோடுமுதல் இயம்ப மாலைக் கொளீஇய விளக்கின் பொழுது என இயைத்து வரிசையாக ஏற்றப்பட்ட விளக்கினையுடைய பொழுது என்றும் பொருள் கூறுதலாகும். கொளீஇய-கொளுத்திய; ஏற்றப்பட்ட.
(58)
திணை : முல்லை.
துறை : இது, வினைமுற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது.
(து - ம்.) என்பது, சென்று வினைமுடித்து மீள்வோன் தன் தேர்ப்பாகன் கேட்டு விரைந்து தேரைச் செலுத்துமாற்றானே, நம் தலைவியுறையும் மூதூரானது காட்டகத்ததாயிரா நின்றது. அத்தகைய புறவத்திடத்தளாய்ப் பொறுத்தலை மேற்கொண்டிருப்பினும் குறித்த பருவத்துப் புகுதாவிடின் அவள் துன்புறுமாலென வருந்திக் கூறாநிற்பது.