பக்கம் எண் :


128


     (இ - ம்.) இதனை "அவனறிவு ஆற்ற அறியு மாகலின்" (தொல்-கற்- 6) என்னும் நூற்பாவினுள் "ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்" என்பதன்கண் அமைத்துக்கொள்க.

    
வேனில் முருக்கின் விளைதுணர் அன்ன 
    
மாணா விரல வல்வாய்ப் பேஎய் 
    
மல்லன் மூதூர் மலர்ப்பலி உணீஇய  
    
மன்றம் போழும் புன்கண் மாலைத்  
5
தம்மொடும் அஞ்சும் நம்மிவண் ஒழியச்  
    
செல்ப என்ப தாமே செவ்வரி 
    
மயிர்நிரைத் தன்ன வார்கோல் வாங்குகதிர்ச் 
    
செந்நெலஞ் செறுவின் அன்னந் துஞ்சும் 
    
பூக்கெழு படப்பைப் சாய்க்காட்டு அன்னஎன் 
10
நுதல்கவின் அழிக்கும் பசலையும் 
    
அயலோர் தூற்றும் அம்பலும் அளித்தே. 

     (சொ - ள்). வேனில் முருக்கின் விளை துணர் அன்ன மாணா விரல வல்வாய்ப் பேஎய் - வேனிற் காலத்துச் செம்முருக்கின் பூங்கொத்தில் காய்த்து முற்றிய நெற்றுப்போன்ற மாண்பில்லாத விரல்களையுடைய பூசலிடுகின்ற வலிய வாயையுடைய பேய்; மல்லல் மூதூர் மலர்ப்பலி உணீஇய மன்றம் போழும் புன்கண் மாலை - வளப்பத்தையுடைய பழைமையாகிய ஊரின்கண்ணே தெய்வத்தின்முன் னிடப்படும். அருச்சனையுடனாகிய ஊன்மிடைந்த பலிச் சோற்றையுண்ண வேண்டித் தான் நிலைபெற்றிருக்கின்ற பாழ்மன்றத்தை மோதியெழுகின்ற பிரிந்தாரைத் துன்புறுத்து மாலைப் பொழுதிலே; தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழிய - நம் தலைவரொடு முயங்கிக் கிடப்பினும் அஞ்சுகின்ற நாம் தனியே இங்குத் தங்குமாறு நம்மைக் கைவிட்டு; செவ் அரி மயிர் நிரைத்து அன்ன வார்கோல் வாங்கு கதிர்ச் செந்நெல் அம் செறுவின் அன்னம் துஞ்சும் பூகெழு படப்பைச் சாய்க்காட்டு அன்ன - செவ்விய ஐதாகிய மயிரை நிரைத்து வைத்தாற்போன்ற நீண்ட திரட்சியையுடையனவாய் வளைந்த செந்நெற் கதிர்களையுடைய வயல்களில் அன்னப் பறவை துஞ்சா நிற்கும் பொலிவு பெற்ற விளங்கிய கொல்லைகளையுடைய திருசாய்க் கானத்தைப் போன்ற; என் நுதல் கவின் அழிக்கும் பசலையும் அயலோர் தூற்றும் அம்பலும் அளித்து - எனது நெற்றியின் அழகை அழிக்கும் பசலையையும் அதனை நோக்கி அயலிலாட்டியர் தூற்றும் பழிச் சொல்லையும் எனக்குக் கொடுத்து; தாம் செல்ப என்ப தாம் செல்கிற்பத்தேரன்று உழையர் கூறாநிற்பர்; இனி எங்ஙனம் ஆற்றுவிப்பது ? எ-று.