(து - ம்,) என்பது, சென்று வினைமுடித்த தலைவன் தேர்ப்பாகனை நோக்கி நம் அரசன் பகையைத் தணித்துவிட்டனனாதலால், நீ தேரைப் பூட்டிச் செலுத்துவாயாக; வருந்தியுறையும் நம் காதலி நம்மை நோக்கி விருந்தயர் விருப்பாலாகிய இன்னகையைக் காண்பேமென்று உவந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "பேரிசை யூர்திப் பாகர் பாங்கினும்" (தொல்-கற்-5) என்னும் விதி கொள்க.
| இருநிலங் குறையக் கொட்டிப் பரிந்தின்று |
| ஆதி போகிய அசைவில் நோன்தாள் |
| மன்னர் மதிக்கும் மாண்வினைப் புரவி |
| கொய்ம்மயிர் எருத்தின் பெய்ம்மணி ஆர்ப்பப் |
5 | பூண்கதில் பாகநின் தேரே பூண்தாழ் |
| ஆக வனமுலைக் கரைவலம் தெறிப்ப |
| அழுதனள் உறையும் அம்மா அரிவை |
| விருந்தயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய |
| முறுவல் இன்னகை காண்கம் |
10 | உறுபகை தணித்தனன் உரவுவாள்வேந்தே |