பக்கம் எண் :


143


அவற்றை விலக்கிப் பன்றி யிறைச்சியைக் கொணரா நிற்கும்; சிறு குடியான் - சிறு குடியின்கண்ணே; முருகு புணர்ந்து இயன்ற வள்ளிபோல நீ என் உள் வருதியோ - முருகவேளைக் கலந்துடன் சென்ற வள்ளிநாச்சியாரைப்போல நீ என்னுடன் வருகின்றனையோ?; நின் உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலன் - நின் வடிவின் ஒளி கண்ணில் வீசுதலானே யான் நின்னை நோக்கலாற்றல் ஆகாதேனாயினேன் அதனால் வேறொன்றனையும் எண்ணாதே கொள்; எ - று.

    (வி - ம்.) நீறு - புழுதி. வசி - பிளப்பு. வெள்வசி - வெறும்பிளப்பு. வெற்றிலை வெள்ளிலையென்பது போல, தோளையாதலால் யானென்று முய்ய வேண்டி என்னுள் வருதியோ வென்றானென்க. தோள் உய்வித்தலை, "உறுதோறுயிர் தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக் கமிழ்தி னியன்றன தோள்", என்ற (1106) குறளானுமறிக. முருகு-இளமை: வேளுக்குப் பண்பாகு பெயர். பிளப்புக்களிலே சுருக்குவார் வைத்து விலங்குகளைப் பிடிப்பது வழக்கு. வள்பு - வார். கொள்ளை - மிகுதி. மொய்த்தனவாய் நாய்கொண்ட கொள்ளை யென்க. முருகு தலைமகனுக்கும் வள்ளி கொடிச்சிக்கும் உவமை. இது சிறப்பு நிலைக் களமாக முதலொடு முதல்வந்த வினையுவமம் : தன்னுடன் வரவிளிப்பான் உடன்சென்ற வள்ளியாரை யுவமித்தலின்.

    உள்ளுறை :- பன்றி தலைவியாகவும், வாரினகப்படுதல் தலைவி காம நோயிலகப்பட்டதாகவும், பன்றியின் தசையை நாய்பற்றுதல் தலைவியினலத்தைப் பசலைபற்றி்க் கெடுத்ததாகவும், கானவர் பெயர்க்குதல் தலைவன் அப்பசலையை நீக்குவானாகவுங் கொள்க. இது வினையுவமப் போலி. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தன்னிலைமையை அவள் மனங்கொள்ளும்படி கூறல்.

    (பெரு - ரை.) உன்னுள் வருதியோ என்பதற்கு மாறாக என் உயவு அறிதியோ என்றும் பாடவேற்றுமை யுளது. இப்பாடமே சிறந்ததாகவுந் தோன்றுகின்றது. இப்பாடத்திற்குநின்னை நின் உருவு வள்ளி போலக் கண் எறித்தலான் நோக்கல் ஆற்றலன் என் துன்பத்தை நீ உணர்ந்து கொள்வையோ கொள்ளாயோ என்று பொருள் கூறிக் கொள்க, இது நலம் பாராட்டித் தன்னிலை உரைத்தது என்க.

(82)
  
    திணை : குறிஞ்சி.

    துறை : இஃது, இரவுக்குறிவந்த தலைவன் சிறைப்புறத் தானாகத் தோழி சொல்லியது.

    (து - ம்,) என்பது, தலைமகன் இரவுக்குறியின்கண் ஒருபால் வந்திருப்பதைக் குறிப்பினாலறிந்த தோழி கூகை குழறிச் சேரியிலுள்ளாரைத் துயிலெழுப்புதலையும், அதனா லிடையீடுபடுமென்பதையும் அறிவுறுத்தப்பட்டு அவன் வரைந்துகொள்ள வேண்டிக் கூகையைக் கூறுவாளாய்க் கூகாய் நினக்கு ஊனுணவு தருகிற்பேம்., எங்காதலர் வருகின்றதனை விரும்பித் துஞ்சாது யாம் வருந்தியிருக்குங்காலை அஞ்சும்படி நீ கத்தி ஊராரை யெழுப்பாதேயென இரந்து கூறாநிற்பது.