(து - ம்,) என்பது, தலைமகன் இரவுக்குறியின்கண் ஒருபால் வந்திருப்பதைக் குறிப்பினாலறிந்த தோழி கூகை குழறிச் சேரியிலுள்ளாரைத் துயிலெழுப்புதலையும், அதனா லிடையீடுபடுமென்பதையும் அறிவுறுத்தப்பட்டு அவன் வரைந்துகொள்ள வேண்டிக் கூகையைக் கூறுவாளாய்க் கூகாய் நினக்கு ஊனுணவு தருகிற்பேம்., எங்காதலர் வருகின்றதனை விரும்பித் துஞ்சாது யாம் வருந்தியிருக்குங்காலை அஞ்சும்படி நீ கத்தி ஊராரை யெழுப்பாதேயென இரந்து கூறாநிற்பது.