(து - ம்,) என்பது, தலைவன் களவொழுக்கத்து நீட்டித்தலாலே, அதுபொறாத தோழி களவில் அருகிவருதலை யொழித்து வரைந்து கொள்ளுமாறு குறிப்பாற் கூறுகின்றாள்; பசப்பூரப்பெற்றுத் தலைவி வருந்த அவளை நீ யாதனாலோ கைவிட்டொழித்தனை, அதற்கு யான் நோகின்றேனென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியின்கண் அமைத்துக் கொள்க.
| மலையயற் கலித்த மையார் ஏனல் |
| துணையின் தீர்ந்த கடுங்கண் யானை |
| அணையக் கண்ட அங்குடிக் குறவர் |
| கணையர் கிணையர் கைபுனை கவணர் |
5 | விளியர் புறக்குடி யார்க்கும் நாட |