(இ - ம்.) இதனை, "அவனறிவு ஆற்ற அறியுமாகலின்" (தொல். கற். 6) எனவரும் நூற்பாவின்கண் 'பல்வேறு நிலையினும்' என்பதன்கண் அமைத்துக் கொள்க.
| உள்ளுதொறு நகுவேன் தோழி வள்ளுகிர்ப் |
| பிடிபிளந் திட்ட நாரில்வெண் கோட்டுக் |
| கொடிறுபோல் காய வாலிணர்ப் பாலைச் |
| செல்வளி தூக்கலின் இலைதீர் நெற்றம் |
5 | கல்லிழி அருவியின் ஒல்லென ஒலிக்கும் |
| புல்லிலை ஓமைய புலிவழங்கு அத்தஞ் |
| சென்ற காதலர் வழிவழிப் பட்ட |
| நெஞ்சே நல்வினைப் பாற்றே ஈண்டொழிந்து |
| ஆனாக் கௌவை மலைந்த |
10 | யானே தோழி நோய்ப்பா லேனே. |
(சொ - ள்.) தோழி வள் உகிர் பிடி பிளந்திட்ட நார்இல் வெண் கோட்டு கொடிறு போல் காய வால் இணர்ப் பாலை - தோழீ! பெரிய உகிரையுடைய பிடியானை தின்னுதற் பொருட்டு மேலுள்ள தோலைப் பறித்துக் கொண்டதனால் நாரில்லாத வெளிய கிளைகளையும் பற்றுக்குறடு போன்ற காய்களையுமுடைய வெளிய பூங்கொத்துக்களையுடைய வெட்பாலையினுடைய; செல்வளி தூக்கலின் இலைதீர் நெற்றம் கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும் - ஓடுகின்ற காற்று அசைத்தலினால் இலை யுதிர்ந்த கிளையிலுள்ள நெற்றுக்கள் மலையினின்று விழும் அருவியைப் போல ஒல்லென்னும்படி ஒலியாநிற்கும்; புல் இலை ஓமைய புலி வழங்கு அத்தம் சென்ற காதலர் வழி - புல்லிய இலையையுடைய ஓமையையுடைய புலி இயங்குகின்ற சுரத்து நெறியிலே சென்ற என் காதலர்பால்; வழிப்பட்ட நெஞ்சு நல்வினைப் பாற்று - அவரை வழிபட்டுப் பின்னே சென்றொழிந்த என்னெஞ்சம் முன்பு செய்த நல்வினையின் பயனை இப்பொழுது துய்ப்பதாயிராநின்றது; ஈண்டு ஒழிந்து ஆனாக் கௌவை மலைந்த யானே தோழி நோய்ப்பாலேன் - அந்த நெஞ்சுபோல நல்வினை செய்திலாதேனாகலின் இங்கே தங்கி ஊரார் தூற்றும் அடங்காத பழிச்சொல்லைச் சூடப்பெற்ற யானே தோழீ ! தீவினையின் பாலேனாகி அதன் பயனை நுகராநின்றேன்; உள்ளுதொறும் நகுவேன் - இங்ஙனம் இருவினைப் பயனையும் நுகருமாறு பெற்றதனை நினைக்குந்தோறும் நகை தோன்றுதலானே யானே என்னை நகுவது செய்யா நிற்பேன்காண்!; எ - று.