பக்கம் எண் :


183


ஓடுமிடத்தே பின் தொடர்ந்து செல்ல ஆற்றாது களைப்புற்று அதன்மீது சென்ற விருப்பம் நீங்கியிருந்த குற்றமற்ற இளமையுடையாளிடத்து; உயவினென் யான் சென்று உள் நோய் உரைப்ப - இப்பொழுது வருந்துகின்றேனாகிய யான் சென்று என் உள்ளத்தின்கண்ணே யுள்ள வினைவயிற் செல்ல வேண்டிய கவற்சியைக் கூறிய அளவிலே; மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் - மறுமொழி கூறுதற்கு நாவெழாமையால் ஆற்றாளாய்; ஞாழல் அம்சினை தாழ் இணர் கொழுதி முறிதிமிர்ந்து உதிர்த்த கையள் - நறிய மலரையுடைய ஞாழலினது தாழ்ந்த அழகிய கிளையிலுள்ள பூங்கொத்தைச் கொய்து அதனோடு இளந்தளிரையும் சேரப் பிசைந்து உதிர்த்த கையையுடையளாகி; அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலை - அறிவு மயக்கமுற்றவளின் அழகிய மடப்பத்தினிலையை நீ; அறிதலும் அறிதியோ - அறிந்திருத்தலையும் உடையையோ? உடையையாயின் அதற்கேற்றபடி கடவுவாயாக!; எ - று.

    (வி - ம்.) உயவு - வருத்தம். அறிதலும் அறிதியோ வென்றது காரியவாசகம். வரி - புள்ளி. கொழுதல் - கொய்தல். திமிர்தல் - பிசைதல். அஞருறுவி - மயக்க முற்றவள்.

    அலவன் பின்னுஞ் செல்லலாற்றாநடைய ளென்றதனால், மென்மைத் தன்மையளெனவும் அத்தகையாளிதுகாறும் ஆற்றியிருத்தல் அரியளெனவுங் கூறினான். வசைதீர் குறுமகளென்றதனாலே அவள் குற்றமில்லாளன்றே. அத்தகையாள் பிரிவு நோயென்னுங் குற்றத்தாலிறந்து படுமோ வென்றிரங்கினானாம். விரைந்து தேர்கடாவிச் சென்று காண வேண்டுவான் யானும் உயவினேனென்றான். கொழுதித் திமிர்ந்துதிர்த்தது - செய்வதறியாது மயங்கினார் செய்யுஞ் செய்கை. இது - காதல் கைம்மிகல். மெய்ப்பாடு - உவகைக்கலுழ்ச்சி. பயன் - பாகன் தேர்கடாவல்.

    (பெரு - ரை.) எக்கர் வெறிகொள அசைஇ ஒழிந்த குறுமகள் என வெறிகோடற்குக் குறுமகள் அசைஇயதனை ஏதுவாகக் கொள்க. உள் - உள்ளம்; ஊக்கம். உயவினென்: வினையாலணையும் பெயர்.

(106)
  
    திணை : பாலை.

    துறை :இது, பிரிவிடை மெலிந்த தலைவி தோழிக்குச் சொல்லியது.

    (து - ம்,) என்பது, தலைவன் பிரிதலால் மெலிவுற்ற தலைவி தோழியை நோக்கி எம் காதலர் பின்சென்று வழிபட்டொழிந்த என் நெஞ்சம் நல்வினையின் பாலதாயிற்று; ஊரார் பழி தூற்றும்படி யானொருத்தியே இங்கு நோயுடையேனா யிராநின்றேன்; இதனை நினைக்குந்தோறும் நகைதோன்றுதலானே யானே என்னை நகை செய்து கொள்ளா நிற்பேனென அவலித்துக் கூறாநிற்பது.