பக்கம் எண் :


240


    திணை : முல்லை.

    துறை : இது, தலைவன் வினைமுற்றிவந்து பள்ளியிடத்தானாகப் பெய்த மழையை வாழ்த்தியது.

    (து - ம்,) என்பது, செய்தவினை முடித்து மீண்டுவந்து தலைவியுடனிருந்த தலைவன் கார்ப்பருவத்திலே பெய்த மழையை நோக்கி மேகமே, உதவியை உடையாய், நீ உலகத்துக்கு ஆதாரமாக யாவருந்தொழுமாறு கொடுமுடிகளிலே பொருந்தி உலாவுவாயாக வென வாழ்த்தாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "கரணத்தி னமைந்து முடிந்த காலை" (தொல். கற். 5) எனவரும் நூற்பாவின்கண் "பண்ணமை பகுதி" என்பதன் கண் அமைத்துக் கொள்க.

    
உலகிற்கு ஆணி யாகப் பலர்தொழப் 
    
பலவயின் நிலைஇய குன்றிற் கோடுதோறு 
    
ஏயினை உரைஇயரோ பெருங்கலி எழிலி 
    
படுமலை நின்ற நல்யாழ் வடிநரம்பு 
5
எழீஇ அன்ன உறையினை முழவின் 
    
மண்ணார் கண்ணின் இம்மென இமிரும் 
    
வணர்ந்தொலி கூந்தல் மாஅ யோளொடு 
    
புணர்ந்தினிது நுகர்ந்த சாரல் நல்லூர் 
    
விரவுமலர் உதிர வீசி 
10
இரவுப்பெயல் பொழிந்த உதவி யோயே. 

    (சொ - ள்.) பெருங் கலி எழிலி - பெரிய ஓசையையுடைய மேகமே!; முழவின் மண் ஆர் கண்ணின் இம் என இமிரும் - மத்தளத்தின் மார்ச்சனை வைத்த கண்போல இம்மென முழங்குகின்ற இடிகளுடனே; வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளொடு புணர்ந்து இனிது நுகர்ந்த சாரல் நல் ஊர் - கடைகுழன்று தாழ்ந்த கூந்தலையுடைய மாமைநிறத்தையுடைய காதலியுடனே முயங்கி அவளது நலனை இனிதாக நுகர்ந்து யான் உறைகின்ற சாரலிலுள்ள நல்ல ஊரின்கண்ணே; விரவு மலர் உதிர வீசி இரவுப் பெயல் பொழிந்த உதவியோய் - கலந்த மலர்கள் உதிரும்படி மோதி இரவில் மழை பொழிந்த உதவியையுடையாய்; நின்ற நல் யாழ் வடி நரம்பு படுமலை எழீஇ அன்ன உறையினை - நீ நிலைபெறுதலையுடைய நல்ல யாழின் முறுக்கிய நரம்பினின்று 'படுமலை' என்னும் பண்ணினை எழுப்பினாற் போன்ற ஒலியொடு பெய்யும் மழையினை உடையையாகி; உலகிற்கு ஆணி ஆகப் பலர் தொழப் பலவயின் நிலைஇய குன்றின் கோடுதோறும் - இவ்வுலகத்துக்கோர்