(து - ம்,) என்பது, இரவுக்குறி வந்து சிறைப்புறத்தானாகிய தலைமகன் கேட்டு நீட்டியாது வரைதல்வேண்டித் தோழி, தலைவியை நோக்கி 'நினது நுதல் பசந்தாலும் பெரிய தோள் நெகிழ்ச்சியுற்றாலும் மலைநாடன் நின்பொருட்டு இராப்பொழுதிலே கொடிய சாரல் நெறியில் வாராதொழிவானாக'வென்று கடிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியின்கண் அமைத்துக்கொள்க.
| நன்னுதல் பசப்பினும் பெருந்தோள் நெகிழினும் |
| கொன்முரண் இரும்புலி அரும்புழைத் தாக்கிச் |
| செம்மறுக் கொண்ட வெண்கோட்டு யானை |
| கன்மிசை அருவியில் கழூஉஞ் சாரல் |
5 | வாரற்க தில்ல தோழி கடுவன் |
| முறியார் பெருங்கிளை அறிதல் அஞ்சிக் |
| கறிவளர் அடுக்கத்தில் களவினில் புணர்ந்த |
| செம்முக மந்தி செல்குறி கருங்கால் |
| பொன்இணர் வேங்கைப் பூஞ்சினைச் செலீஇயர் |
10 | குண்டுநீர் நெடுஞ்சினை நோக்கிக் கவிழ்ந்துதன் |
| புன்றலைப் பாறுமயிர் திருத்துங் |
| 1குன்ற நாடன் இரவி னானே. |
(சொ - ள்.) தோழி கறி வளர் அடுக்கத்தில் களவினின் கடுவன் புணர்ந்த செம்முக மந்தி - தோழீ ! மிளகுக் கொடி வளர்ந்து படருகின்ற மலைப்பக்கத்திலே களவுப் புணர்ச்சியிற் கடுவனால்