முயங்கப்பட்ட சிவந்த முகத்தையுடைய பெண் குரங்கு; செல் குறி முறி ஆர் பெருங்கிளை அறிதல் அஞ்சி - தனக்குப் புணர்ச்சி வேறுபாட்டானுண்டாகிய குறியைத் தளிர்களைத் தின்னுகின்ற தன் பெரிய சுற்றம் அறியுமே என்று அஞ்சி; கருங் கால் பொன் இணர் வேங்கைப் பூஞ் சினைச் செலீஇயர் - கரிய அடியையும் பொன் போல்கின்ற பூங்கொத்தினையுமுடைய வேங்கை மரத்தின் அழகிய கிளைமீது சென்று; குண்டு நீர் நெடுஞ் சுனை நோக்கிக் கவிழ்ந்து - ஆழமாகிய சுனைநீரை நோக்கித் தலைகவிழ்ந்திருந்து; தன் புன் தலைப் பாறுமயிர் திருத்தும் நாடன் - தன் மெல்லிய தலையில் முன்பு புணர்ச்சியாலே குலைந்த முச்சிமயிரை அக்குலைவு தோன்றாதபடி திருத்தாநிற்கும் மலைநாடன்; நல் நுதல் பசப்பினும் பெருந்தோள் நெகிழினும் - நினது நல்ல நெற்றி பசலையூர்ந்து பசந்து காட்டினும் பெரிய தோளின்வளை நெகிழந்தவாயினும்; கொல் முரண் இரும்புலி அரும்புழைத் தாக்கி்ச் செம் மறுக்கொண்ட வெண்கோட்டு யானை - கொல்லுகின்ற வலிய கரிய புலியை நுழைதற்கரிய முழையகிருல் மோதிக் கொன்றுபோகட்டு அதனிரத்தம் பூசுதலானே சிவந்த மறுவைக்கொண்ட வெளிய கோட்டினையுடைய களிற்றியானை; கல் மிசை அருவியில் கழூஉஞ் சாரல் - மலைமேனின்று வருகின்ற அருவியின் கண்ணே சென்று கழுவாநிற்குஞ் சாரல் நெறியில்; இரவினான் வாரற்க - இரவில் எஞ்ஞான்றும் வாரா தொழிவானாக; எ-று.
(வி - ம்.) தில்: காலத்தின்மேலது. முறி - தளிர். கறி - மிளகு. குண்டு - ஆழம். பாறுதல் - சிதைதல். பசப்பானும் நெகிழ்ச்சியானும் உண்டாய துன்பத்தோடு ஆற்றதேதத்துக்கும் அஞ்சவேண்டுதலின் வாரற்கவென்றதாம். நுதல்பசப்பினுமென்றது, பசலைபாய்தல். தோள் நெகிழினுமென்றது, உடம்பு நனிசுருங்கல், வாரற்கவென்றது, அழிவில் கூட்டத்து அவன் புணர்வு மறுத்தல்.
உள்ளுறை :- களவினிற் புணரப்பட்ட மந்தி அப்புணர்குறியைத் தம் சுற்றம் நோக்குமென்றஞ்சிப் பாறுமயிர்திருத்துமென்றது, களவொழுக்கத்தாலே புணரப்பட்ட தலைமகள் அப் புணர்ச்சி வேறுபாட்டைத் தன் சுற்றத்தாரறிவரென்றஞ்சி நாள்தோறும் மெய்யை முன்போலாகும்படி திருத்திக்கொள்ளவேண்டியவ ளாகின்றனள்; ஆதலின் இவ் அச்சந் தீர வரைக வென்றதாம்.
இறைச்சி :- புலியை யானை சென்றழித்துத் தன் கோட்டைக் கழுவு மென்றது, ஏதிலாட்டியர் எடுத்த பழிச்சொல்லைக் கெடுத்து ஓரையும் நாளும் நோக்காது கலந்ததனாலாகிய ஏதத்தை வரைந்து போக்கிக்கொள்வானாக வென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - இரவுக்குறி மறுத்து வரைவுகடாதல்.
(பெரு - ரை.) 'செல் குறி' என்றும் பாடம். அடுக்கத்துக் கடுவன் களவினிற் புணர்ந்த மந்தி என இயைத்துக் கொள்க. 'செம்மறுக்கொண்ட வெண்கோடு' என்புழிச் செய்யுளின்பமுணர்க.
(151)