(து - ம்,) என்பது, இரந்துகுறைபெறாது மடலேறுமாறு கருதிய தலைமகன் தோழியின் முன்னிலையில் வேறொருவருடன் கூறுவான் போன்று காமம் மடலைத் தந்தது; அலர் பலமிடைந்த எருக்கலரைத் தந்தது; ஞாயிறு துன்பைத் தந்தது; இரவு கையறவைத் தந்தது; ஆதலின், யான் இனி எவ்வண்ணம் உய்குவேனென அத்தோழி கேட்டுத் தன்குறை முடிக்கும்படியாக அழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "மெய்தொட்டுப் பயிறல்" (தொல். கள. (11)) என்னும் நூற்பாவின்கண் வரும் "மடன்மா கூறு மிடனுமா ருண்டே" என்னும் விதி கொள்க.
| மடலே காமந் தந்தது அலரே |
| மிடைபூ எருக்கின் அலர்தந் தன்றே |
| இலங்குகதிர் மழுங்கி எல்விசும்பு படரப் |
| புலம்புதந் தன்றே புகன்றுசெய் மண்டிலம் |
5 | எல்லாந் தந்ததன் தலையும் பையென |
| வடந்தை துவலை தூவக் குடம்பைப் |
| பெடைபுணர் அன்றில் உயங்குகுரல் அளைஇக் |
| கங்குலும் கையறவு தந்தன்று |
| யாங்கா குவென்கொல் அளியேன் யானே. |
(சொ - ள்.) காமம் மடல் தந்தது - யான் கொண்ட காமமோ இந்தப் பனங்கருக்காலே கட்டிய பரியைத் தந்தது; அலர் பூ மிடை எருக்கின் அலர் தந்தன்று - ஊராரெடுக்கும் அலரோ ஆவிரை, பூளை, உழிஞை என்று இன்னன மலர்களை இடையிட்டுக் கட்டிய எருக்கம் பூ மாலையைத் தந்தது; புகன்று செய் மண்டிலம் எல்விசும்பு படர இலங்கு கதிர் மழுங்கி புலம்பு தந்தன்று - எல்லாம் விரும்புதலைச் செய்கின்ற ஆதித்த மண்டிலமோ தன்னொளி விசும்பின் மேலே செல்லும்படி விளங்கிய கதிர்கள் மழுக்க மடைந்து எனக்குத் துன்பத்தைத் தந்தது; எல்லாம் தந்ததன் தலையும் - முற்கூறிய யாவும் எல்லாவற்றையுந் தந்தவற்றின் மேலும்; பை என வடந்தை துவலை தூவ - மெல்லென வாடைக்காற்றுப் பனித்துளியைத் தூவுதலாலே; குடம்பைப் பெடை புணர் அன்றில் இயங்கு குரல் அளைஇ - கூட்டிலே தன் பெடையைப் பிரியாது புணர்ந்திருக்கும் அன்றிற் பறவையின் இயங்குகின்ற குரலுடனே அளாவிக்கொண்டு;