பக்கம் எண் :


265


கங்குலும் கையறவு தந்தன்று - இராப் பொழுதென்பதும் என் செயலெல்லாம் அழியும்படி கையறவைத் தந்தது; அளியேன் யான் - கண்டோர் யாவராலும் இரங்கும்படியாகிய நிலைமையையுடைய யான்; யாங்கு ஆகுவென் - இவ்வளவு துன்பஞ் சூழ்ந்துகொள்ள இவற்றிடையே இனி எவ்வண்ணம் உய்குவேனோ? எ - று.

    (வி - ம்.) எல் - ஒளி; இயக்கமுமாம். புலம்பு - துன்பம்; தனிமையுமாம். வடந்தை - வடக்கினின்று வருங்காற்று; வாடையென்பதுமது. கையறவு - செயலறவு.

    காமங் காழ்கொண்டமையால் மடலேறுதலும் வரைபாய்தலுமன்றிப் பிறிதொன்று செய்யக் கிடந்ததில்லையென மடற்பரிகொண்டமையின், காமம் மடலைத் தந்ததென்றான். ஞாயிறு மறைய மாலையெய்தலும் தனித்திருக்க ஆற்றாது புலம்பு மேற்கொள்ளுதலானே மண்டிலம் புலம்பு தந்ததென்றான். இரவுமுற்றம் தனிமையிலே புலம்பிக்கிடந்தமையாற் கையறவு தந்ததென்றான். இவையனைத்துமில்லையேல் யான் கருதுகிலேனென்றவாறு. துன்புற்றுத் தஞ்சமென்றாரைக் காக்கும் மரபினளாதலின் யான் படுந்துன்பம் இத்தன்மையதென் றறிவுறுத்தி னென்பால் இரங்குவளெனத் தோழிகேட்பக் கூறினானாயிற்று. மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

    (பெரு - ரை.)'உயங்கு குரல்' என்றும் பாடம். இதற்குப் பெடையைப் புணரவிரும்பிய அன்றில் அதனைக் காணாமையின் வருந்தியெடுத்த துன்பக் குரலையும் அளாவிக்கொண்டு எனப் பொருள் கூறுக. உயங்குதற்குக் காரணமான குரல் எனினுமாம். அலர் அலர் தந்தன்றென்புழி நயமுணர்க. பூ மிடை என்றும், எல்விசும்புபடர இலங்கு கதிர் என்றும் மாறுக.

(152)
  
    திணை : பாலை.

    துறை : இது, பிரிவிடைமெலிந்த தலைவி சொல்லியது.

    (து - ம்,) என்பது, தலைவன் பிரிதலால் மெலிவுற்ற தலைவி தன்னெஞ்சம் எப்பொழுதும் அவன்பாற் சென்றமையும் தன் தனிமையும் குறிப்பாற் கூறுவாள் 'எழிலி சென்றாற்போல என்னெஞ்சம் அவர்பாற் சென்றொழிந்ததனாலே தனிமகன்போன்று என்னுடம்பு இங்கிருக்கலாகிய'தென வருந்திக்கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "ஆவயின் வரூஉம் பல்வேறு நிலை" (தொல். கற். 6) என்பதன்பாற் படுத்துக.

    
குணகடல் முகந்து குடக்கேர்பு இருளி 
    
மண்திணி ஞாலம் விளங்கக் கம்மியர் 
    
செம்புசொரி பானையின் மின்னிஎவ் வாயும் 
    
தன்தொழில் வாய்த்த இன்குரல் எழிலி