(து - ம்,) என்பது, போர்முடித்துமீளுந் தலைவன் தான் கூறுவதனைத் தேர்ப்பாகன் கேட்டு விரையத் தேர்செலுத்தியதன்பொருட்டு மகிழவேண்டி அவனை நோக்கி நமது வருகையைக் காக்கைப்புள்ளினம் கரைந்து தெரிவித்தனவோ நம் காதலி மகிழ்தற்குக் காரணந்தான் யாதென உவந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "பேரிசை யூர்திப் பாகர் பாங்கினும்" (தொல். கற். 5) என்னும் விதி கொள்க.
| இறையும் அருந்தொழில் முடித்தெனப் பொறைய |
| கண்போல் நீலம் சுனைதொறும் மலர |
| 1வீதா வேங்கைய வியனெடும் புறவின் |
| இம்மென் பறவை ஈண்டுகிளை இரிய |
5 | நெடுந்தெரு அன்ன நேர்கொள் நெடுவழி |
| இளையர் ஏகுவனர் பரிப்ப வளையெனக் |
| காந்தள் வள்ளிதழ் கவிகுளம்பு அறுப்பத் |
| தோள்வலி யாப்ப ஈண்டுநம் வரவினைப் |
| புள்ளறி வுறீஇயின கொல்லோ தெள்ளிதின் |
10 | காதல் கெழுமிய நலத்தள் ஏதில் |
| புதல்வற் காட்டிப் பொய்க்குந் |
| திதலை யல்குல் தேமொழி யாட்கே. |
(சொ - ள்.) இறையும் அருந்தொழில் முடித்தென - நம்முடைய அரசனுஞ் செய்தற்கரிய போர்த் தொழிலை முற்றுவித்ததனாலே; பொறைய கண்போல் நீலம் சுனைதொறும் மலர - மலையிலுள்ள சுனைகள் தோறும் மாதர்கண்போலும் குவளைமலரா நிற்ப; வீதா வேங்கைய வியன் நெடும் புறவின் - மலருதிர்ந்து பரவுகின்ற வேங்கை மரங்களையுடைய அகன்ற நெடிய காட்டின் கண்ணே; இம் என் பறவை ஈண்டு கிளை இரிய - இம்மென ஒலிக்கின்ற வண்டுகளின் நெருங்கிய கூட்டம் இரிந்தோடாநிற்ப; நெடுந்தெரு அன்ன நேர்கொள் நெடுவழி இளையர் ஏகுவனர்