பக்கம் எண் :


284


போலத் தலைவனுந் தலைவியுமாகிய நீங்களிருவீரும் வதுவையயர்ந்தில்லற நிகழ்த்திப் புதல்வரையீன்று விளங்குவீரென்றதாம். ஏனையுவமம் ஆயினும் ஞாயிற்றுப்புத்தேளை உவமித்தலினிஃ துள்ளுறையன்மை யுணர்க. மெய்ப்பாடு - உவகை. பயன் - தலைவியை ஆற்றியுவப்பித்தல்.

    (பெரு - ரை.) உன்னுடைய துன்பங்களும் ஒழிய இனி நீயும் ஆற்றியிருப்பாயாக! என்பது குறிப்பெச்சம் என்க.

(163)
  
164, . . . . . . . . . . . . . . .
திணை : பாலை.

துறை : இது, பொருண்முடித்து வந்தானென்பது வாயில்கள் வாய்க் கேட்ட தோழி, தலைவிக்குரைத்தது.

    (து - ம்.) என்பது, தலைவன் பொருள்வயிற்பிரிந்து மீண்டுவந்ததனை ஏனைய உழையர் முதலாயினோராலறிந்த தோழி, தலைவியை நெருங்கி 'அவர் கடுங் கோடையிலே சென்றனராயினும், நல்லதே செய்தாரென்று கூறி நான் முன்பு தெளிவிப்ப நீ தெளிந்தாயல்லை; அங்ஙனம் நீ வருந்துவதனைப் போக்குமாறு அவர் குறித்த பருவத்திற்றைநாளா லிங்குவந்தனர் கா'ணென கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும்பொருள்" (தொல். கற். 9) என்னும் நூற்பாவின்கண் வரும் 'எதிரும் உளப்பட பிறவும்' என்பதனால் அமைத்துக் கொள்க.

    
உறைதுறந்து இருந்த புறவின் தனாது 
    
செங்கதிர்ச் செல்வன் தெறுதலின் மண்பக 
    
உலகுமிக வருந்தி அயாவுறு காலைச் 
    
சென்றனர் ஆயினும் நன்றுசெய் தனரெனச் 
5
சொல்லில் தெளிப்பவுந் தெளிதல் செல்லாய் 
    
செங்கோல் வாளிக் கொடுவில் ஆடவர் 
    
வம்ப மாக்கள் உயிர்த்திறம் பெயர்த்தென 
    
வெங்கடற்று அடைமுதல் படுமுடை தழீஇ 
    
உறுபசிக் குறுநரி குறுகல் செல்லாது 
10
மாறுபுறக் கொடுக்கும் அத்தம் 
    
ஊறிலர் ஆகுதல் உள்ளா மாறே. 

    (சொ - ள்.) உறை துறந்து இருந்த புறவில் தனாது செங்கதிர்ச் செல்வன் தெறுதலின் - தோழீ! மழைபெய்யாதொழிந்த பாலைநிலத்தின்கண் அந் நிலத்தின் தெய்வமாகிய ஆதித்தன் காய்தலானே; மண்பக உலகு மிக வருந்தி அயாவுறுகாலை - நிலம் பிளவுபட அதனால் உலகம் மிகவருந்தித் துன்புற்ற காலத்து;