பக்கம் எண் :


286


165. . . . . . . . . . . . . . . .
திணை : குறிஞ்சி.

     துறை : (1) இது, நொதுமலர் வரையும் பருவத்துத் தோழி தலைவிக்கு அறத்தொடு நிலைபயப்பச் சொல்லியது.

    (து - ம்.) என்பது, தலைவன் வரைவுநீட்டித்தலும் அயலோர் மணந்துகொள்ளுதற்குத் தூதுவிடக்கண்ட தோழி தலைவியை நோக்கிக் 'குன்றநாடன் இங்கு வரும்போதெல்லாம் நின்னருமையை அவனுக்குரைத்ததனால் நீ அவனை வெறுப்பதுபோல அவன் நின்னை வெறுத்திலனாதலின், வருந்தாது என்னை அன்னையர் வினவும்போது நீ என்பால் அறத்தொடு நின்றுவிடு; நின்னை விரும்பிய அயலவர்தூது மிகவருகின்றன; அவ் வேற்று வரைவு நமக்குத் தகுதியன்'றெனக் கூறுவதுடன் இறைச்சியாலே, தெய்வம் பொறைகொளச் செல்குவமெனவுங் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "என்பு நெகப் பிரிந்தோள் வழிச்சென்று. கடைஇ அன்பு தலையடுத்த வன்புறைக் கண்ணும்", (தொல்-கள. 23) என்னும் விதியின்கண் அமைத்துக் கொள்க.

     துறை : (2) வரைவு மலிந்ததூஉமாம்.

    (து - ம்.) என்பது, தோழி தலைவியை நோக்கிக் 'குன்றநாடனுக்கு நின் அருமையை உணர்த்தலினால் அவன் வெறுப்பின்றி ஏற்றனன்; இடையே வேற்றுவரைவு நேரும்போலத் தோன்றுவதால் நீ அறத்தொடு நின்றுவிடு; நமக்கு இருமணங்கூடுதல் இயல்போவன்றெனத் தெளியக் கூறாநிற்பது. (உரை இரண்டற்கும் ஒக்கும்.)

    (இ - ம்.) இதற்கும் முற்கூறிய விதியே கொள்க.

    
அமர்க்கண் ஆமான் அருநிறம் முள்காது 
    
பணைத்த பகழிப் போக்குநினைந்து கானவன் 
    
அணங்கொடு நின்றது மலைவான் கொள்கெனக் 
    
கடவுள் ஓங்குவரை பேண்மார் வேட்டெழுந்து 
5
கிளையொடு மகிழும் குன்ற நாடன் 
    
அடைதருந் தோறும் அருமைதனக்கு உரைப்ப 
    
நப்புணர்வு இல்லா நயனி லோர்நட்பு 
    
அன்ன ஆகுக என்னான் 
    
ஒல்காது ஒழிமிகப் பல்கின தூதே. 

    (சொ - ள்.) அமர்கண் ஆமான் அருநிறம் முள்காது பணைத்த பகழிப் போக்கு நினைந்து - தோழீ! அமர்த்த கண்ணையுடைய ஆமானின் அரிய நெஞ்சிலே பாய்ந்து தங்காது குறிதவறி யொழிந்துபோன அம்பின் போக்கைக் கருதி; கானவன் மலை அணங்கொடு நின்றது வான் கொள்க என - கானவன் தன்னுள்ளத்து