பக்கம் எண் :


30


    
கனங்குழைக் கமர்த்த சேயரி மழைக்கண் 
10
அமர்ந்தினிது நோக்கமொடு செகுத்தனன் 
    
எனைய ஆகுக வாழிய பொருளே.

    (சொ - ள்.) என் நெஞ்சே வாழிய - என் நெஞ்சமே ! நெடுங்காலம் வாழ்வாயாக!; பொருள் புணரில் புணராது - நீ இப்பொழுது கருதிய பொருளோ யாம் தலைவியைப் புணர்ந்து இல்லத்துத் தங்கிய வழி அடையப் பெறுவதொன்றன்று; பொருள்வயின் பிரியின் புணர்வு புணராது - இதனைவிட்டுப் பொருள்வயிற் பிரிந்தாலோ இவளைப் புணரும் புணர்ச்சி இனி அடையப்பெறுவதொன்றன்று; ஆயிடை சேர்ப்பினும் செல்லாய் ஆயினும் நல்லதற்கு உரியை - ஆதலின் இவ்விரண்டினையுஞ் சீர்தூக்கிப் பொருள்வயிற் பிரிந்தாயானாலும் பிரியாதிவ்வழி யிருந்தாயானாலும் இவற்றுள் நல்லதொரு காரியத்தைச் செய்தற்குரியை ஆவாய்; பொருள் வாடாப் பூவின் பொய்கை நாப்பண் ஓடுமீன் வழியின் கெடுவ - ஆயினும் யான் அறிந்த அளவில் பொருள்கள் வாடாத மலரையுடைய பொய்கையிடத்து ஓடுகின்ற மீன் செல்லும் நெறியே போலத் தாமிருந்த விடமும் தெரியாமற் கெடுவனகாண்; யானே விழுநீர்வியல் அகம் தூணி ஆக எழுமாண் அளக்கும் விழுநெதி பெறினும்-யானோவெனில் பெரிய கடல் சூழ்ந்த அகன்ற நிலனே அளக்கு மரக்காலாகக் கொண்டு ஏழு மரக்கால் வரையில் மாட்சிமைப்பட அளக்கத்தக்க பெரிய நிதியைப் பெறுவதாயினும், அந்நிதியை விரும்பேனாகி; கனம் குழைக்கு அமர்த்த சே அரி மழைக்கண் அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனன்-இக் கனவிய குழையையுடையாளுடைய மாறுபட்ட செவ்வரி பரந்த குளிர்ச்சியையுடைய கண்கள் பொருந்தி இனிதாக நோக்கும் நோக்கத்தாற் செகுக்கப்பட்டேனாதலின் நின்னொடு மோதற்கு வாரேன்காண்!; பொருள் ஏனைய ஆகுக வாழிய - இனி அப்பொருள் எத்தன்மையவாயினும் ஆகுக! அவை போற்றுவார்மாட்டு வாழ்வனவாகுக! எ-று.

    (வி - ம்.) தூணி - தானியம் முதலியவற்றை யளக்குங் கருவி; மரக்கால். நெதி - செல்வம். செகுத்தல் - அழித்தல்; ஈண்டு ஆற்றலழியப் பெறுதல், கனங்குழை: அன்மொழி: கனங்குழைக்கு; உருபு மயக்கம் புணர்ச்சியில் வெறுப்படையாத இளமை முழுதும் இன்பம் நுகர்ந்திருப்பின் முதுமையிற் பொருளீட்ட இயையாதென்பான், பொருளே புணராதெனவும் பிரியின் இவள் இறந்துபடுதல் திண்ணமாதலின் இனிப் புணர்ச்சியே யெய்தப் பெறாதெனவுங் கூறிப் பின்னர்ப் பொருள் நிலையாமையை மீனொடு நெறிபோலக் கெடுமென உவமையாலெடுத்துக்காட்டி, நல்லதற்குரியையெனக் குறிப்பால் இன்பத்தின் கண்ணே படுத்தானாம். மெய்ப்பாடு - பிறன்கண் தோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - செலவழுங்குதல்.