பக்கம் எண் :


344


அவன் அரசகுமரனாதலின், நும்மையெதிரேற்று முகமன் வழங்குந்தகுதிப்பாடு உடையவனென அவள் தந்தையைச் சிறப்பித்துக் கூறினாள். வருத்தமிகுதியுடையளென்று கருதி மகளொடு நுவன்றவை கரவாது கூறும்பொருட்டு ஈன்றேன் யானே என்றாள்; இஃது அன்பு மிகுதிபற்றி.

    மூலத்தொடு வரைந்த குறிப்பு:- [தந்தையூரிதுவென்றது, அவள் (செவிலி) விருந்தோம்பத் தங்கிப்போகலா மென்றவாறு. ஈன்றேன் யானென்றது, எனதாற்றாமை கண்டாற் சொல்லுவார்க்கறமுண்டென்றவாறு. பெயரென்பது சொல்லுக்கு மறுமாற்றம்.] மெய்ப்பாடு - அழுகையைச் சார்ந்த உவகை. பயன் - தலைமகளைக் காண விரும்பல்.

     (பெரு - ரை.) மதவலி - அன்மொழித்தொகை. மிகவும் வலிமையை உடையோய் என விரித்திடுக. யா - ஒரு மரம். என் மகள்போலக் கண்ணிற்படுதலால் என்க. இத்தகைய உறுப்படையாளமுடையாள் ஒருத்தியை நீயிர் நும்மெதிர் கண்டனிரோ என்று குறிப்பால் வினவுவாள் நுண்பல்..........................கூந்தலள் என்று அடையாளம் கூறினள். பெயர் - புகழ்.

(198)
  
     திணை : நெய்தல்.

     துறை : இது, வன்பொறை எதிரழிந்தது.

     (து - ம்.) என்பது, தலைவன் பிரிதலானே வருந்திய தலைவியை நோக்கி நீ வருந்தாது வலிதிலே பொறுத்திருவென்ற தோழிக்கு நீ என்னைப் பொறுத்திரு என்கின்றனையே; துறைவனுடைய முயக்கம் எய்தாதவிடத்துக் குருகின் ஒலிக்கு உடைந்தும் இன்னும் உளனாயிராநின்றேனே; என்னுயிர் எவ்வளவு வன்மையுடையதென அழிந்து கூறா நிற்பது.

     (இ - ம்.) இதனை, " கொடுமை ஒழுக்கம்..........................ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்" (தொல். கற். 6) என்னும் விதியினால் அமைத்துக் கொள்க.

    
ஓங்குமணல் உடுத்த நெடுமாப் பெண்ணை 
    
வீங்குமடற் குடம்பைப் பைதல்வெண் குருகு 
    
நள்ளென் யாமத்து உயவுதோ றுருகி 
    
அள்ளல் அன்னஎன் உள்ளமொடு உள்ளுடைந்து 
5
உளனே வாழி தோழி வளைநீர்க் 
    
கடுஞ்சுறா எறிந்த கொடுந்திமில் பரதவர் 
    
வாங்குவிசைத் தூண்டில் ஊங்கூங் காகி 
    
வளிபொரக் கற்றை தாஅய் நளிசுடர் 
    
நீல்நிற விசும்பின் மீனொடு புரையப் 
10
பைபய இமைக்குந் துறைவன் 
    
மெய்தோய் முயக்கங் காணா ஊங்கே.