பக்கம் எண் :


349


கூடாதென்றதன்காறும் பாங்கன் கூற்றைக்கொண்டு கூறியது. போதலொல்லாள் எனவே எத்திறத்தானும் கூடினாலன்றி உய்கலேனென்றதாயிற்று. தெய்வங் காத்தலானே எத்தகைய ஊறுமில்லாத பாவை போல ஊழ்வினை கூட்டி முடித்தலானே எவ்வண்ணங் கூறினும் நின் கூற்றுப் பயன் படாதெனக் குறிப்பித்தானுமாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - பாங்கனை யுடம்படுவித்தல்.

     (பெரு - ரை.) "சொல்லெதிர் கொள்ளாள் இளையள்" என்றும் பாடம்; இப்பாடமே சிறந்ததாம். மலையுறை.........................கூடாது என்னுமளவும் பாங்கன் கூற்றைத் தலைவன் கொண்டு கூறினன். பெருநிலங் கிளரினும் என்பதற்கு இந்தப் பெரிய நிலம் நடுங்கினும் - அஃதாவது பூகம்பமுண்டாயினும் எனப் பொருள்கோடலே நேரிதாம். பாவை தன்னிலை மாறாமைக்கே இது கூறப்பட்டதாகலின் பாவையை உலகத்துள்ளார் சினங்கொண்டெதிர்ப்பர் என்பது பொருந்தாமையும் உணர்க.

     நான் அவளை எவ்வுபாயத்தான் என்னெஞ்சினும் அகற்ற முயலினும் அவள் அகல்கின்றிலள் எனற்கே சூறைக்காற்றும் பிறவுமாகிய எவற்றானும் தன்னுருக் கெடாத கொல்லிப்பாவையை உவமை எடுத்தான். இன்னும் கொல்லிப்பாவை தெய்வங் காத்தலின் ஊறு படாது நிலைபெறுதல் போல இவளும் தெய்வத்தான் (ஊழால்) என்னெஞ்சிலே நிலைபெறுத்தப்பட்டனள் என்பது தோன்றவே தெய்வங்காக்கும் திருநல உருவின் மாயாப் பாவை என்று உவமைக்கு அடை கூட்டிய நுணுக்கமும் உணர்க. இச்செய்யுளின் கண் இயற்கையின் சீற்றமாகிய கால் பொருது இடித்தல் முதலியவற்றை அழகுற அமைத்திருத்தலுணர்க.

(201)
  
     திணை : பாலை.

     துறை : இஃது, உடன்போகாநின்ற தலைமகன் தலைமகட்குச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, தலைவியை இருளிலே கொண்டு தலைக்கழிந்து சுரநெறியே செல்லுந் தலைமகன் அவளை "மடந்தாய்! நுந்தையினது காடு இதனை நீ பாராய்" என அவளது அயாவொழிந்தகலுமாறு கூறி மகிழ்வித்துக்கொண்டு செல்லாநிற்பது.

     (இ - ம்.) இதனை, " ஒன்றாத்தமரினும்" .................. "கற்பொடு புணர்ந்த கௌவை யுளப்பட, அப்பாற் பட்ட வொருதிறத்தானும்" (தொல். அகத். 41) என்பதனால் அமைத்துக் கொள்க.

    
புலிபொரச் சிவந்த புலாவஞ் செங்கோட்டு 
    
ஒலிபன் முத்தம் ஆர்ப்ப வலிசிறந்து 
    
வன்சுவல் பராரை முருக்கிக் கன்றொடு 
    
மடப்பிடி தழீஇய தடக்கை வேழம் 
5
தேன்செய் பெருங்கிளை இரிய வேங்கைப்