| உள்ளல் கூடா தென்றோய் மற்றுஞ் |
5 | செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லித் |
| தெய்வங் காக்குந் தீதுதீர் நெடுங்கோட்டு |
| அவ்வெள் அருவிக் குடவரை அகத்துக் |
| கால்பொருது இடிப்பினுங் கதழுறை கடுகினும் |
| உருமுடன்று எறியினும் ஊறுபல தோன்றினும் |
10 | பெருநிலங் கிளரினுந் திருநல உருவின் |
| மாயா வியற்கைப் பாவையிற் |
| போதல் ஒல்லாளென் நெஞ்சத் தானே. |
(சொ - ள்.) மலை உறை குறவன் காதல் மடமகள் அருங்கடிக் காப்பினள் - மலையின்கண்ணே உறைகின்ற குறவனின் காதலையுடைய இளமகள் அரிய காவலையுடையவள்; பெறல் அருங்குரையள் - அதனால் நின்னாலே பெறுதற்கரியள் கண்டாய்; சொல் எதிர் கொள்ளாள் - நீ கூறிய மொழிகளை ஏற்றுக் கொள்ளும் இயல்புடையள் அல்லள்; இனையள் அனையோள் உள்ளல் கூடா தென்றோய் - அவள் இத்தன்மையளாதலின் அவளை நினைத்தலும் கூடாது என்ற நண்பனே!; செவ்வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லித் தெய்வம் காக்கும் - சிவந்த வேரையுடைய பலா மரங்களின் பழங்கள் பொருந்திய தெய்வத்தாலே பாதுகாக்கப்பட்டு வருகின்ற; தீதுதீர் நெடுங் கோட்டு அவ் வெள் அருவிக் குடவரை அகத்து - தீது தீர்ந்த நெடிய கொடு முடியையும் அழகிய வெளிய அருவியையுமுடைய கொல்லி மலைச் சாரலிலே; கால் பொருது இடிப்பினும் உறை கதழ் கடுகினும் உரும் உடன்று எறியினும் - காற்று மோதி யடித்தாலும் வலிய மழை விரைந்து வீசினாலும் சினங்கொண்டு இடிமுழங்கி மோதினாலும்; ஊறு பல தோன்றினும் பெருநிலம் கிளரினும் - இவையேயன்றி வேறுபல ஊறுபாடுகள் தோன்றினாலும் பெரிய இவ்வுலகமே சினங்கொண்டு எதிர்த்தாலும்; திரு நல உருவின்மாயா இயற்கைப் பாவையின் - தன் அழகிய நல்ல வடிவம் கெடாத இயல்பினையுடைய பாவைபோல; என் நெஞ்சத்தான் போதல் ஒல்லாள் - என்னெஞ்சினின்றும் நீங்கி ஒழிபவள் அல்லளாயிராநின்றாள்; ஆதலின் அவளை யான் எவ்வாறு மறந்துய்வேன்? எ - று.
(வி - ம்.) பலவின்வேர்ப் பயங்கெழுகொல்லி எனமாற்றி, பலா வேரிலே காய்த்துப் பழுக்கின்ற பழம்பொருந்திய கொல்லியெனவுமாம். கிளர்தல் - சினங்கொள்ளுதல். குரை: அசைநிலையிடைச் சொல்.
நின்பால் அன்புடையளாயினும் காவலினுள்ளாளாதலிற் பெறுதலும் அரியள்; சொல்லுமேற்று விடையளிப்பாளல்லள் என்றானாம்.