பக்கம் எண் :


361


விழுந்து நனைத்தலைச் செய்ய; விளிவு இலா விம்மிக் கலுழும் கண்ணொடு - நீங்காதபடி விம்மி விம்மி அழுகின்ற கண்ணுடனே; பெரிது அழிந்து எவன் நினைவு வாடுதி - பெரிதும் அழிந்து வருந்தி என்ன கருதி வாடுகின்றனை?; நம் காதலர் செல்வர் அல்லர் செலினும் நோய் நோன்மார் அல்லர் - நம் காதலர் நின்னைப் பிரிந்து செல்பவரல்லர்; அங்ஙனம் பிரிந்து சென்றாலும் சென்ற விடத்தே தமக்குண்டாகிய காம நோய் பொறுப்பவரல்லர்; அவர் கொன்னு நம்பும் குரையர் - அவர்தாம் நின்னிடத்துப் பெரியதொரு விருப்பமுடையவர் கண்டாய்; சிறந்த அன்பினர் சாயலும் உரியர் - நின்பாற் சிறந்த அன்புடையரா யிராநின்றார், மிக்க மென்மையும் பொருந்தினவராயினார்; பிரிந்த நம்மினும் இரங்கி - அவரைப் பிரிந்துறையும் நம்மினும்காட்டில் இரக்கமுற்று; அரும்பொருள் முடியாதாயினும் வருவர் - தாம் சென்றவிடத்து ஈட்டுதற்குரிய பொருள் முற்றுப் பெறாதாயினும் அது நிமித்தமாக அங்கே நீட்டியாது உடனே மீண்டு வருவர்; அதன்தலை இப் பெரு மழைக்குரல் - அதன் மேலும் இப்பெரிய மேகத்தின் முழக்கமானது; இன் துணைப் பிரிந்தோர் நாடித் தருவது போலும் - இனிய துணையைப் பிரிந்தோரை நாடித் தருவது போலுமாய் இராநின்றது ஆதலின் நீ வருந்தாதே கொள்! எ - று.

     (வி - ம்.) விறல் - வலிமை. சாய்தல் - உள்ளுதனுணுக்கம். அறல் - நீர். நினைபு - நினைத்து. நோன்றல் - பொறுத்தல்: நோன்மார் - பொறுப்பவர். கொன்: பெருமையுணர்த்திய உரிச்சொல். நம்பு - விருப்பம். குரை : அசைநிலை இடைச்சொல். சாயல் - மென்மை. ஆதலின் நீ வருந்தாதேயென்பது குறிப்பெச்சம். பெரிதழிந்து வாடியது - துன்பத்துப்புலம்பல்.

     அங்ஙனம் வாராது நீட்டித்தாலும் இம் மழையைக் கண்டவளவிலே தமியராய் ஆங்குத் தங்கலரென்னுங் கருத்தால் குரல் தருவதுபோலுமெனக் கூறினாள். மெய்ப்பாடு - அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.

     (பெரு - ரை.) தெண்மணி போல் அறல் என மாறுக. மணி -ஈண்டுமுத்து. இவன் இனைபு வாடுதி எனக் கண்ணழித்துக் கோடலுமாம். அப்பொழுது கார்ப்பருவந் தொடங்குதல் காட்டி இப்பருவத்தே அவர் பிரிவு சூழார்காண் என்று ஆற்றுவிப்பாள் பெருமழைக் குரல் நாடித் தருவது போலும் என்றாள் என்க.

(208)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : இது, குறைமறுக்கப்பட்டுப் பின்னின்ற தலைமகன், ஆற்றனாய் நெஞ்சிற்குச் சொல்லுவானாய்ச் சொல்லியது.