பக்கம் எண் :


363


     இறைச்சி :- சிலவாய விதையை விதைத்துப் பலவாய பயனைப் பெறும் ஏனல் காவலி னிவளை விரும்பிய யானும் நின்பாற் கூறும் சிலவாய கூற்றினாற் பெற்று இவள் கொடுக்கின்ற பலவாய இன்பந் துய்ப்பேனாக வென்றதாம். மெய்ப்பாடு - தன்கட்டோன்றிய அவலம். பயன் - தோழி கேட்டுக் குறை முடிப்பாளாவது.

     (பெரு - ரை.) மழலை - இளஞ்சொல்; மிழலை - நிரம்பா மெல்லிய இன்சொல் என வேற்றுமையுணர்க. கிளியும் தாமறிப என்புழி உம்மையான் அறிந்ததன்றியும் எனப் பொருள்பட்டுத் தலைவிக்கும் தலைவற்கும் கூட்ட முண்மையைக் குறிப்பாக வுணர்த்தி நின்றது. எனக்குப் படுதல் - என் பொருட்டுப் பேசப்படுதல்.

(209)
  
     திணை : மருதம்.

     துறை : இது, தோழி தலைமகனை நெருங்கிச் சொல்லுவாளாய் வாயில் நேர்ந்தது.

     (து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகனைக் காதலி புலந்து கொள்ளலும் அதனைத் தோழியாலே தணிக்கக் கருதி அவள் பாலுற்றனனாக. அவனைநோக்கி, "ஊரானே! இப்பெற்றிப்பட்ட எனைத்தும் செல்வமெனப்படுவதன்று; அடைந்தாரைக் காத்தலே செல்வமெனப்படுவது; அச்செயல் நின்பால் இல்லை"யென்று தலைவியூடல் தீரும்வண்ணம் கடிந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "பிழைத்துவந் திருந்த கிழவனை நெருங்கி இழைத்து ஆங்கு ஆக்கிக் கொடுத்தற் கண்ணும்" (தொல். கற். 9) என்னும் விதிகொள்க.

    
அரிகால் மாறிய அங்கண் அகல்வயல் 
    
மறுகால் உழுத ஈரச் செறுவின் 
    
வித்தொடு சென்ற வட்டி பற்பல 
    
மீனொடு பெயரும் யாணர் ஊர 
5
நெடிய மொழிதலுங் கடிய ஊர்தலும் 
    
செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே 
    
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் 
    
புன்கண் அஞ்சும் பண்பின் 
    
மென்கண் செல்வஞ் செல்வமென் பதுவே. 

    (சொ - ள்.) அரி கால் மாறிய அம் கண் அகல்வயல் மறுகால் உழுத ஈரச் செறுவின் - நெல் அறுத்து நீங்கப்பெற்ற அழகிய இடமகன்ற வயலின்கண்ணே மறுபடி உழுத ஈரமுடைய சேற்றில்; வித்தொடு சென்ற வட்டி பல் பல மீனொடு பெயரும் - விதைக்கும் வண்ணம் விதைகொண்டு சென்ற கடகப்பெட்டியில் மிகப் பலவாகிய மீன்களைப் பிடித்துப் போகட்டு மீண்டு கொண்டு வருகின்ற;