பக்கம் எண் :


419


வரக் கூவாநிற்ப; இன்னாது ஆகிய காலைப் பொருள் வயின் பிரிதல் ஆடவர்க்கு இயல்பு எனின் - பிரியும் பொழுதே இன்னாமையைத் தருவதாகிய இளவேனிற் காலத்துப் பொருள்வயிற் பிரிவது ஆடவர்க்கு இயல்பாகு மென்னில்; அறத்தினும் மன்ற பொருள் அரிது - அடைந்தோம் என்பாரைக் கைவிடேம் என்று கூறிப் பாதுகாக்கும் அறத்தினுங் காட்டில் தெளிவாகப் பொருள் அரியது போலும்? இது மிக்க வியப்பு; எ - று.

     (வி - ம்.) பிரிந்த வழிக் குயில்கூவுமோசை தனக்கு இன்னாமை செய்தலில் அவை இங்ஙனமே கூவுகின்றன வென்றாள், "ஊடினீரெல்லா முருவிலான் றன்னாணை, கூடுமி னென்று குயில்சாற்ற" என்றார் பிறரும். அடைந்தாரைக், காப்பேமென்று முன்னர்க் கூறியபடி பின்னர்க் காப்பதே அறமெனப் படுவது. அதனைக் கைவிட்டுப் பொருள் பெரிதெனப் பிரிந்தார் ஆதலின் அறத்தைக் கைவிட்டார்க்குப் பிற கைகூடாகவே யென்று இரங்கியவாறு. மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) பொருள்வயிற் பிரிதல் ஆடவர்க்கு இயல்பு; ஆற்றியிருப்பது மகளிர் கடமை என்று ஆற்றுவிக்குந் தோழியை நோக்கிக் கூறுகின்றாள் ஆகலின் பிரிதல் ஆடவர்க்கு இயல்பெனின் எனத் தோழி கூற்றைக்கொண்டு கூறுபவள் இயல்பாயினும் இன்னாதாகிய இப் பருவத்தே பிரிதல் அறமாமோ? என்று நொந்து கூறுகின்றாள் என்க. "பிரியல்" என்றும் பாடம்.

(243)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : இஃது, அறத்தொடு நிலைவலித்த தோழியைத் தலைவி முகம்புக்கது.

     (து - ம்.) என்பது, களவொழுக்கத்துத் தலைமகன் சிலபொழுது வாராமையாலே தலைமகள் கவலையால் வாடியதறிந்த தோழி இதனைத் தமர்க்கு அறிவுறுத்தி வரைவெதிர் கொள்ளுவிப்பலெனக் கருதுதலும் அதனை யறிந்த தலைவி தோழியை நோக்கி என்னுடம்பிலுள்ள அழகைக் கெடுத்த பசலையை நீ கண்டு வைத்தும் நாடனுக்கு உரைத்தலாவது அன்னைக்கு இது தணியும் வகையை யுரைத்தலாவது செய்தாயல்லையே யென்று நொந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு,

  
"உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும் 
  
 செயிர்தீர் காட்சிக் கற்புச்சிறந் தன்றெனத் 
  
 தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு 
  
 காமக் கிழவ னுள்வழிப் படினும் 
  
 தாவி னன்மொழி கிழவி கிளப்பினும் 
  
 ஆவகை பிறவுந் தோன்றுமன் பொருளே"    ( தொல். கள. 11) 

என்னும் விதி கொள்க. இது தலைவி தோழிக்கு அறத்தொடு நின்றது.