பக்கம் எண் :


420


    
விழுந்த மாரிப் பெருந்தண் சாரல்
    
கூதிர்க் கூதளத்து அலரி நாறும் 
    
மாதர் வண்டின் நயவருந் தீங்குரல் 
    
மணநாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் 
5
உயர்மலை நாடற்கு உரைத்தல்ஒன்றோ  
    
துயர்மருங்கு அறியா அன்னைக் கிந்நோய் 
    
தணியுமா றிதுவென உரைத்தல் ஒன்றோ 
    
செய்யாய் ஆதலிற் கொடியை தோழி 
    
மணிகெழு நெடுவரை அணிபெற நிவந்த 
10
செயலை அந்தளிர் அன்னஎன் 
    
மதனின் மாமெய்ப் பசலையுங் கண்டே. 

     (சொ - ள்.) தோழி மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த செயலையந் தளிர் அன்ன - தோழீ! நீலமணி போன்ற நீண்ட மலையில் அழகு பொருந்த உயர்ந்த அசோகந் தளிர் போன்ற; என் மதனின் மா மெய்ப் பசலையும் கண்டு - எனது நல்ல மேனியின் அழகுகெடும்படி செய்த பசலையை நீ கண்டு வைத்தும்; மாரி விழுந்த பெருந் தண் சாரல் கூதிர்க் கூதளத்து அலரி நாறும் மாதர் வண்டின்்- மழைபெய்த பெரிய தண்ணிய சாரலின் கண்ணே கூதிர்காலத்துக் கூதாளிமலரின் மணம் வீசுகின்ற அழகிய வண்டின்; நயவரும் தீம் குரல் மணம் நாறும் சிலம்பின் அசுணம் ஓர்க்கும் - விருப்பமுறும் இனிய ஓசையை யாழோசை போலுமென்று மலைமுழையிலிருக்கின்ற அசுணமானாகிய விலங்கு செவி கொடுத்துக் கேளாநிற்கும்; உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்று - உயர்ந்த மலைநாடனுக்குச் சொல்லுதல் ஒன்றாவது; துயர் மருங்கு அறியா அன்னைக்கு இந் நோய் தணியும் ஆறு இது என உரைத்தல் ஒன்று - எனது துன்பத்தின் மிகுதியை அறியாத அன்னைக்கு இந்நோய் தணியும் வழி இதுதான் என உரைத்தல் ஒன்றாவது; செய்யாய் ஆதலின் கொடியை - செய்தாயல்லை இங்ஙனம் இரண்டில் ஒன்றேனுஞ் செய்து என்னைப் பாதுகாவாமையாலே நீ கொடுமை மிக்குடையையாவாய்!; எ - று.

     (வி - ம்.) கூதளம் - தாளிக்கொடி; அதன் பேதமுமாம். மாதர் - அழகு. கூதள மணநாறும் வண்டு - தேனையுண்ணுமாறு தாளிப்பூவில் விழுதலால் அம் மலர் மணம்வீசும் வண்டு.

     அன்னை வெறியெடுத்தல் முதலாயின கூறி அதன்முன் அவனை விரைந்து மணஞ் செய்து கொள்ளும்படி வற்புறுத்தாமைபற்றி நாடற்குரைத்தலாய வொன்றேனுஞ் செய்திலையென்றாள். அன்னை வெறியெடாதபடி நாடனது மார்பினால் வந்த இந்நோய் அவன் மார்பை முயங்குவதாலே தணியும் என அவட்கு அறிவுறுத்தாமையின்