பக்கம் எண் :


422


    
சுரும்பிமிர் சுடர்நுதல் நோக்கிப் 
    
பெருங்கடற் சேர்ப்பன் தொழுதுநின் றதுவே. 

     (சொ - ள்.) தோழி தகைய அணிமலர் முண்டகத்து ஆய் பூங் கோதை - தோழீ! தகுதியையுடைய அழகிய மலர் மிக்க கழிமுள்ளியின் நுண்ணிய பூமாலையை; மணி மருள் ஐம்பால் வண்டுபடத் தைஇ - நீலமணிபோன்ற கூந்தலில் வண்டுகள் பொருந்தும்படி சூடி; துணி நீர்ப் பௌவம் துணையொடு ஆடி - தெளிந்த நீரையுடைய கடலிலே தோழியரோடு சென்று நீராடி; ஒழுகு நுண் நுசுப்பின் அகன்ற அல்குல் தெளி தீம் கிளவி - நேர்மையுடைய நுணுகிய இடையையும் அகன்ற அல்குலையும் தெளிந்த இனிய சொல்லையுமுடையாய்; என் அரிது புணர்இன் உயிர் வௌவிய நீ யாரை என - எனது அரிதாயமைந் திருக்கின்ற இனிய உயிரைக் கைக்கொண்ட நீதான் யாவளோ? உரையாய்! என்று; பூண் மலி நெடுந்தேர்ப் புரவி தாங்கித்தான் நம் அணங்குதல் அறியான் - பூண் நிரம்பிய நெடிய தேரிலே பூட்டிய குதிரையொடு வந்து அவன்தான் நம்மை வருத்துதல் அறியானாய்; நம்மில் தான் அணங்குற்றமை கூறி - நம்மால் அவன் வருந்தியது மட்டும் கூறி; கானல் சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கி - கழிச் சோலையின்கண்ணே நாம் நின்றபொழுது நறுமணத்தால் வண்டுகள் வந்து சூழ்ந்தொலிக்கின்ற ஒளியையுடைய நமது நெற்றியை நோக்கி; பெருங்கடல் சேர்ப்பன் தொழுதுநின்றது நகை ஆகின்று - பெரிய கடற் சேர்ப்பன் கை கூப்பி வணங்கி நின்றதைத் கருதுந்தோறும் நகையுடையதாயிராநின்றது காண்! எ - று.

    (வி - ம்.) முண்டகம்-கழிமுள்ளி. துணிநீர்-தெளிந்தநீர். ஒழுகல்-நேர்மை.

     அவன் செல்வக் குறைபாடின்மை கூறுவாள், தேர்ப்புரவி தாங்கி என்றாள். அவனாலே தலைவி மயங்கி நின்றமை அறிவுறுத்துவாள், தான் நம்மணங்குதலென்றாள். மெய்ப்பாடு - பிறன்கட்டோன்றிய பேதைமை பொருளாகப் பிறந்த நகை. பயன் - தலைவியின் கருத்தறிதல்.

     (பெரு - ரை.) "தகைய.................உயிர் வௌவிய நீ" இவை தலைவன் கூற்று: இவற்றைத் தோழி தலைவிக்குக் கொண்டு கூறுகின்றாள். புரவி தாங்கி என்றது, குதிரையை இழுத்து நிறுத்திக்கொண்டு என்றவாறு.

(245)
  
     திணை : பாலை.

     துறை ; இது, பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறீஇயது.