பக்கம் எண் :


453


    (து - ம்.) என்பது பாங்கி மதியுடம்பாட்டின் கண்ணே இவனொரு குறையுடையான் போலுமென்று தோழி உய்த்துணர நிற்குமிடத்து அதுவரையும் பொறாத தனது நெஞ்சைத் தலைவன் நெருங்கி நெஞ்சமே இவளின் தலைவியாகிய மெல்லிய கூந்தலையுடையாள் நம்பால் அன்புடையளாதலின் நீ வருந்தாதொழியென்று தெளியப் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "தோழி குறை அவட்சார்த்தி மெய்யுறக் கூறலும்" (தொல். கள. 11) என்னும் விதி கொள்க.

    
இறுகுபுல் மேய்ந்த அறுகோட்டு முற்றல் 
    
அள்ளல் ஆடிய புள்ளி வரிக்கலை 
    
வீளை அம்பின் வில்லோர் பெருமகன் 
    
பூந்தோள் யாப்பின் மிஞிலி காக்கும்  
5
பாரத்து அன்ன ஆர மார்பின் 
    
சிறுகோல் சென்னி ஆரேற்று அன்ன 
    
மாரி வண்மகிழ் ஓரி கொல்லிக் 
    
கலிமயிற் கலாவத்து அன்னஇவள் 
    
ஒலிமென் கூந்தல் நம்வயி னாளே. 

    (சொ - ள்.) இறுகு புல் மேய்ந்த அறுகோட்டு முற்றல் அள்ளல் ஆடிய புள்ளி வரிக் கலை - காய்ந்த புல்லை மேய்கின்ற உதிர்ந்த கொம்பினையுடைய முதிர்ச்சியையுடைய சேற்றில் ஓட்டி வருந்தச் செய்த புள்ளியையும் வரியையும் உடைய கலைமானை; வீளை அம்பின் வில்லோர் பெருமகன் பூந்தோள் யாப்பின் மிஞிலி காக்கும் - எய்யும் ஒலியையுடைய அம்பினையும் வில்லினையுமுடைய வீரர் தலைவனாகிய பொலிவு பொருந்திய தோளிலே கவசம் பூட்டிய மிஞிலி என்பவனாலே காவல் செய்து வருகின்ற; பாரத்து அன்ன (இவள்) ஆரம் மார்பில் சிறுகோல் சென்னி - பாரம் என்னும் ஊரைப்போன்ற ஆத்திமாலையையுடைய மார்பையுடைய சிலவாகிய ஊர்களை ஆட்சிகொண்ட செங்கோலையுடைய சோழனுடைய; ஆர் ஏற்று அன்ன (இவள்) மாரிவண் மகிழ் ஓரி கொல்லி - ஆரேற்றைப் போன்ற இவளுடைய தலைவியாகிய மழை போன்ற கொடையும் கள்ளுணவுமுடைய ஓரியென்பவனது கொல்லி மலையிலிருக்கின்ற; கலிமயில் அன்ன இவள் - செருக்கிய மயிலைப் போன்ற நம் காதலியாவாள்; கலாவத்து ஒலி மென் கூந்தல் - அம் மயிலின் கலாபம் போன்ற தழைந்த மெல்லிய கூந்தலையுடையாள்; நம் வயினாள் - நம்பாலள் அல்லளோ?; ஆதலின் நெஞ்சமே கவலை கொள்ளாதே; நின்செயல் விரைய முடிவு பெறுங்காண்! எ - று.

    (வி - ம்.)வீளை - அம்பினொலி.