(து - ம்.) என்பது, தலைவியைத் தலைமகன் கொண்டுதலைக் கழிந்தவழிக் கற்பொடு புணர்ந்த கௌவைக்கண் மனையகத்திருந்த நற்றாய், அஃது அறத்தாறெனக் கொண்டாளாயினும், ஏதிலார் கூறும் பழிமொழி பொறாளாய் மயங்கி 'முன்னமே என்னுயிரைக் கொண்டு போகாது இப்பொழுது ஏதிலாளன் பின்சென்ற என்மகளைப் பின் சென்று தேடி அலர்கூறுதலை யான் கேட்டிருக்குமாறு என்னை இதுகாறும் கைவிட்டொழிந்த கூற்றும் தானே கெடுவதாக' என்று மருண்டு கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "தன்னும் அவனும் அவளும்" என்ற நூற்பாவின்கண் (தொல். அக. 36) தெய்வம் நன்மை தீமை அச்சஞ்சார்தல் என்று அன்ன பிறவும் என்பதனாற் கொள்க.
| இரும்புனிற்று எருமைப் பெருஞ்செவிக் குழவி |
| பைந்தாது எருவின் வைகுதுயில் மடியும் |
| செழுந்தண் மனையோடு எம்மிவண் ஒழியச் |
| செல்பெருங் காளை பொய்மருண்டு சேய்நாட்டுச் |
5 | சுவைக்காய் நெல்லிப் போக்கரும் பொங்கர் |
| வீழ்கடைத் திரள்காய் ஒருங்குடன் தின்று |
| வீசுனைச் சிறுநீர் குடியினள் கழிந்த |
| குவளை உண்கணென் மகளோர் அன்ன |
| செய்போழ் வெட்டிப் பெய்தல் ஆயம் |
10 | மாலைவிரி நிலவிற் பெயர்புபுறங் காண்டற்கு |
| மாயிருந் தாழி கவிப்பத் |
| தாவின்று கழிகஎற் கொள்ளாக் கூற்றே. |
(சொ - ள்.) இரும் புனிற்று எருமைப் பெருஞ்செவிக்குழவி - அணித்தாக ஈனப்பட்ட கரிய எருமையின் பெரிய செவியையுடைய கன்று; பைந் தாது எருவின் வைகு துயில் மடியும் செழுந் தண் மனையோடு - பசிய மலரில் உள்ள பராகங்கள் உதிர்ந்து எருவாகக் கிடத்தலையுடைய தொழுவத்திடத்துத் தங்கப்பெற்ற துயிலை மேற்கொண்டு செழுமையுடைய குளிர்ச்சியுற்ற