பக்கம் எண் :


466


பேடைக்கு; இருஞ்சேற்று அயிரை தேரிய - கரிய சேற்றின்கண்ணவாகிய அயிரை மீனைத் தேர்ந்தெடுக்க வேண்டி; தெள் கழிப் பூ உடைக்குட்டம் துழவும் துறைவன் - தெளிந்த கழியிடத்துப் பூவுதிரப்பெற்ற ஆழமான இடத்தினைத் தன் மூக்காலும் காலாலும் துழாவா நிற்கும் துறையையுடைய கொண்கன், நல்காமையின் நசை பழுதுஆக - குறித்தபொழுது வந்து கூடித் தலையளி செய்யாமையால் யான் கொண்ட விருப்பம் வீணாகிவிட அதனாலே; கையற்ற என் பெருஞ் சிறுமை-செயலழிந்த என் பெரிய நோயானது; அலர்வாய் அம்பல் மூதூர் அலர்தந்து - பழிமொழி கூறுகின்ற அம்பலையுடைய பழைய நமது ஊராரால் அறியப்பட்டு; நோயினும் பெரிது நோய் ஆகின்றது - முன்பு நான் கொண்டிருந்த நோயினுங் காட்டில் மிக்க நோயுடையதாகாநின்றது; எ - று.

     (வி - ம்.) தேரிய; செய்யிய வென்னும் வாய்பாட் டெச்சம். கடலம், அம்: சாரியை.

     உள்ளுறை :- நீர்க்காக்கைச் சேவல் சூலொடு வதிந்த பெடைக்கு அயிரை மீனைத் தேடுமென்றது, என்னை மணஞ்செய்துகொண்டு மனையறம் படுத்து யான் இல்வயினிருக்குமாறு வைத்துத் "தாயத்தாற் செய்தது தேவரும் பிதிரரு மின்புறார்" ஆதலின் அவரை இன்புறுத்துமாறு வேற்று நாட்டுக்குச் சென்று பொருளீட்டிவந்து இல்லறம் நிகழ்த்தற்பாலனென்று அறிவுறுத்தியதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) நோயாகின்று அது நோயினும் பெரிது எனக் கண்ணழித்து, அலர்தந்து நோயாகியது அது யான்படும் காமநோயினும் பெரிது என்று பொருள் கூறலுமாம். அலர்தந்து: ஒருசொல். அலர்ந்து என்றவாறு. இரண்டாவது துறைக்குப் பயன் வரைவு கடாதல் என்க.

(272)
  
  
     திணை : குறிஞ்சி.

     துறை : இது, தோழி தலைமகனது வரவுணர்ந்து தலைமகட்குரைப்பாளாய் நின் வேறுபாடு தாய்க்குப் புலனாக அவள் வேலனைக் கூவி வெறி அயருமென்பதுபடச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, (வெளிப்படை) அங்ஙனஞ் சொல்லுகின்றவள் 'வெறியயர்தலாலே குன்ற நாடனை நினைக்குந்தோறும் அவன் செய்கையாலே தந்த வருத்தம் எனது நெஞ்சை நடுங்கச் செய்யா நின்றது; இஃதெப்படியாய் முடியுமோ என்று நொந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கும், "களனும் பொழுதும் . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.