(து - ம்.) என்பது, தலைவன் பிரிந்து சுரஞ்சென்றதறிந்த தலைமகள் கானின் கடுமையை நினைந்து வருந்துதலும். அதுகண்ட தோழி, சுரம் மழை பெய்தலினாலே பொலிவுடைய தென்று கூறுதல் கருதி அங்ஙனம் பிரிந்து சுரநெறி செல்லுகின்ற தலைவர் 'மழை பெய்த மலையின்கண்ணே மான்சென்று தீண்டலானே குமிழம் பழம் உதிர்கின்ற கானக நெறியில் நீ எம்மோடு வருதியோ என்று அழையா நின்றனர் கா'ணென்று கூறி ஆற்றுவிப்பது.
(இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும் பொருள்" (தொல். கற். 9) என்னும் நூற்பாவின்கண் 'பிறவும் வகைபட வந்த கிளவி என்பதனால் கொள்க.
| நெடுவான் மின்னிக் குறுந்துளி தலைஇப் |
| படுமழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து |
| உழைமான் அம்பிணை தீண்டலின் இழைமகள் |
| பொன்செய் காசின் ஒண்பழந் தாஅங் |
5 | குமிழ்தலை மயங்கிய குறும்பல் அத்தம் |
| எம்மொடு வருதியோ பொம்மல் ஓதியெனக் |
| கூறின்று முடையரோ மற்றே வேறுபட்டு |
| இரும்புலி வழங்குஞ் சோலைப் |
| பெருங்கல் வைப்பிற் சுரன்இறந் தோரே. |
(சொ - ள்.) இரும்புலி வேறுபட்டு வழங்கும் சோலைப் பெருங்கல் வைப்பின் சுரன் இறந்தோர் - கரிய புலி சினங்கொண்டு மாறுபட்டு உலவாநிற்குஞ் சோலையையுடைய பெரிய மலையிடத்துளதாகிய சுரத்தின்கண்ணே சென்ற காதலர்; நெடுவான் மின்னிக் குறுந்துளி தலைஇப் படுமழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து - நெடிய மேகங்கள் மின்னிச் சிறிய துளிகளாகப் பெய்யத் தொடங்கி மிக்க மழை பெய்த பிளப்புக்களையுடைய மலைச்சாரலிலே; உழை மான் அம் பிணை தீண்டலின் - உழையாகிய