(து - ம்.) என்பது, பகற்குறி நீக்கத்துத் தலைவியைத் தோழியர் கூட்டத்து விடுத்துவந்து ஆங்குத் தன் ஊர்க்குச் செல்லுந் தலைவனைத் தோழி நெருங்கி "யாம் குறமகளிராகிய கொடிச்சியேம், எம்மூர் இம்மலையிடத்தது; ஆதலின், நீ இப்பொழுதே நின்னூர்க்குச் செல்லாது எம்மூர் வந்து நறவுண்டு குரவைகண்டு செல்வாயாக" வென்று விருந்தெதிர்கொள்கின்ற உலகியல் கூறுவாள் போன்று வரைவுபயப்பக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "வேளாண் பெருநெறி வேண்டிய விடத்தும்" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.
| கோடு துவையாக் கோள்வாய் நாயொடு |
| காடுதேர் நசைஇய வயமான் வேட்டு |
| வயவர் மகளிர் என்றி ஆயின் |
| குறவர் மகளிரேம் குன்றுகெழு கொடிச்சியேம் |
5 | சேணோன் இழைத்த நெடுங்கால் கழுதின் |
| கான மஞ்ஞை கட்சி சேக்கும் |
| கல்லகத் ததுஎம் ஊரே செல்லாது |
| சேந்தனை சென்மதி நீயே பெருமலை |
| வாங்கமை பழுனிய நறவுண்டு |
10 | வேங்கை முன்றிற் குரவையுங் கண்டே. |