பக்கம் எண் :


471


     உள்ளுறை :- மள்ளரால் அறுபட்ட நெய்தற்பூக் கதிரொடு கலந்து அரிக்கு இடையிலே வாடிக்கிடந்தும் தன் துன்பத்தை ஆராயாமல் கதிரை நோக்கினவுடன் மலருமென்றது, ஏதிலாட்டிய ரெடுத்த பழிச் சொல்லாலே தலையெடாதபடி படுக்கையாகக் கிடந்தும் யான் தலைவனைக் காணில் எந்நோயைக் காட்டாது முகமலர்ச்சியோடு அவற்கு உடன்படுவேனென்றதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல். இவ்வுள்ளுறை "கடுங்கை வயலுழவர் காலைத் தடிய, மடங்கி யரியுண்ட நீலந் - தடஞ்சேர்ந்து, நீளரிமேற் கண்படுக்கு நீணீரவந்தியார், கோளரியே றிங்கிருந்த கோ" எனப் பிறநூலுள்ளும் வந்தமை காண்க.

     (பெரு - ரை.) நெல் அரிநர்தங் கூர்வாளால் நெய்தல் புண்ணுறக் காணாராக அது முதலொடு போந்ததாக அப்பூ தன் விழுமம் அறியாது வாய்திறக்கும் என இயைபு காண்க. கதிரவன் இனித் தன்னைக் காய்ந்து கொல்வான் என்பதுணராமல் அவன் வரவுகண்டு மலரும் என்பதற்கிரங்கிப் பேதை நெய்தல் என்றாள். பெருநீர்ச் சேர்ப்பன் என்றது இகழ்ச்சி. அருளில்லாதவன் என்பது கருத்து.

(275)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : இது, பகற்குறிவந்து பெயருந் தலைமகனை உலகியல் சொல்லியது.

     (து - ம்.) என்பது, பகற்குறி நீக்கத்துத் தலைவியைத் தோழியர் கூட்டத்து விடுத்துவந்து ஆங்குத் தன் ஊர்க்குச் செல்லுந் தலைவனைத் தோழி நெருங்கி "யாம் குறமகளிராகிய கொடிச்சியேம், எம்மூர் இம்மலையிடத்தது; ஆதலின், நீ இப்பொழுதே நின்னூர்க்குச் செல்லாது எம்மூர் வந்து நறவுண்டு குரவைகண்டு செல்வாயாக" வென்று விருந்தெதிர்கொள்கின்ற உலகியல் கூறுவாள் போன்று வரைவுபயப்பக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "வேளாண் பெருநெறி வேண்டிய விடத்தும்" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.

    
கோடு துவையாக் கோள்வாய் நாயொடு 
    
காடுதேர் நசைஇய வயமான் வேட்டு 
    
வயவர் மகளிர் என்றி ஆயின் 
    
குறவர் மகளிரேம் குன்றுகெழு கொடிச்சியேம்  
5
சேணோன் இழைத்த நெடுங்கால் கழுதின்  
    
கான மஞ்ஞை கட்சி சேக்கும் 
    
கல்லகத் ததுஎம் ஊரே செல்லாது 
    
சேந்தனை சென்மதி நீயே பெருமலை 
    
வாங்கமை பழுனிய நறவுண்டு 
10
வேங்கை முன்றிற் குரவையுங் கண்டே.