(து - ம்.) என்பது, அறத்தொடு நிற்றலின்பின் மணஞ்செய்துகொள்ளாது பொருள் ஈட்டுதற்குத் தலைவன் வேற்று நாட்டுச் சென்றதனால் தலைமகள் வருந்தி வண்டை நோக்கி, "வண்டே! கொடியை; நீ கூடிமுயங்குவது போல எம்மை முயங்குமாறு செய்திலை; நின்நெஞ்சுங் கரியதேயோ? இந்நோயால் இன்றே யான் மடிகின்றேன்; நீ நீடுவாழ்தி"யென அழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்" (தொல். கள. 21) என்னும் விதி கொள்க.
| கொடியை வாழி தும்பி இந்நோய் |
| படுகதில் அம்ம யான்நினக்கு உரைத்தென |
| மெய்யே கருமை அன்றியுஞ் செவ்வன் |
| அறிவுங் கரிதோ அறனிலோய் நினக்கே |
5 | மனையுறக் காக்கும் மாண்பெருங் கிடக்கை |
| நுண்முள் வேலித் தாதொடு பொதுளிய |
| தாறுபடு பீரம் ஊதி வேறுபட |
| நாற்றம் இன்மையிற் பசலை ஊதாய் |
| சிறுகுறும் பறவைக் கோடி விரைவுடன் |
10 | நெஞ்சுநெகிழ் செய்ததன் பயனோ அன்பிலர் |
| வெம்மலை அருஞ்சுரம் இறந்தோர்க்கு |
| என்நிலை உரையாய் சென்றவண் வரவே. |
(சொ - ள்.) தும்பி அறன் இலோய் கொடியை மனை உறக் காக்கும் மாண் பெருங் கிடக்கை நுண்முள்வேலி - வண்டே! அறநெறியிலே செல்லாதோய் நீ மிக்க கொடியை நமது மாளிகையைப் பொருந்தக் காவலாயிருக்கும் மாட்சிமைப் படப் பெரியதாக அமைக்கப்பட்ட நுண்ணிய முட்களையுடைய வேலியிலே படர்ந்து; தாதொடு பொதுளிய தாறுபடு பீரம் ஊதி - தேனொடு தழைந்த குலைகட்டிய பீர்க்கம்பூவிலே சென்று தேனைப் பருகி; வேறுபட நாற்றம் இன்மையின் பசலை ஊதாய் - அதற்கு மாறாக நறுநாற்றமில்லாமையினாலே என் பசலையிடத்து முரன்றாயும்