பக்கம் எண் :


475


    
படுகாழ் நாறிய பராரைப் புன்னை 
    
அடுமரல் மொக்குளின் அரும்புவாய் அவிழப் 
    
பொன்னின் அன்ன தாதுபடு பன்மலர் 
    
சூடுநர் தொடுத்த மிச்சில் கோடுதொறும் 
5
நெய்கனி பசுங்காய் தூங்குந் துறைவனை 
    
இனியறிந் திசினே கொண்கன் ஆகுதல் 
    
கழிச்சேறு ஆடிய கணைக்கால் அத்திரி 
    
குளம்பினுஞ் சேயிறா ஒடுங்கின 
    
கோதையும் எல்லாம் ஊதைவெண் மணலே. 

     (சொ - ள்.) அடு மரல் மொக்குளின் படு காழ் நாறிய பராரைப் புன்னை அரும்பு வாய் அவிழப் பொன்னின் அன்ன தாதுபடு பல்மலர் - அடுத்த மரலின் மொக்குகளைப்போலப் பொருந்திய வயிரம் விளங்கிய பருத்த அடியையுடைய புன்னையரும்புவாய் திறந்து மலராநிற்ப அங்ஙனம் மலர்ந்த பொன் போன்ற மகரந்தமிக்க பலவாகிய மலர்களில்; சூடுநர் தொடுத்த மிச்சில் - அணிந்து கொள்பவர் கொய்து தொடுத்தனபோக எஞ்சியன; கோடு தொறும் நெய்கனி பசுங்காய் தூங்கும் - கிளைகடோறும் நெய்மிக்க பசிய காயாகத் தூங்காநிற்கும்; துறைவனை - கடற்றுறையுடைய தலைவனை; கழிச் சேறு ஆடிய கணைக்கால் அத்திரி குளம்பினும் சே இறா ஒடுங்கின - கழிக்கரையிலுள்ள சேறுபட்ட திரண்ட காலையுடைய அவனது தேரிலே பூட்டிய கோவேறு கழுதையின் குளம்பினெங்கும் சிவந்த இறாமீன்கள் ஒடுங்கப்பட்டு அழிந்தன; கோதையும் எல்லாம் ஊதை வெண்மணல் - அவனது மாலையிலும் மற்றெவற்றினும் காற்றால் எறியப்படும் வெளிய மணல் ஒடுங்கின ; கொண்கன் ஆகுதல் இனி அறிந்திசின் - ஆதலின் நினக்கே கணவனாமாறு விரைவில் வந்தனன் போலுமென்று இப்பொழுதுதான் அறிந்துகொண்டேன்; எ - று.

     (வி - ம்.)நெய்கனி காயென்றதனால் புன்னைக் காயிலிருந்து நெய்யெடுக்கப்படும் வழக்கு அக்காலத்து முளதெனவறிக. ஒடுங்கின வென்பதனை மணலொடுங் கூட்டுக.

    பகற்பொழுதிலே பலரறிய அருங்கல முன்னிட்டு விழைவு மிகுதியால் விரைந்து வருதலின் இறாக் குளம்பிலொடுங்கின; கோதை முதலாயவற்றுள் மணலொடுங்கின வென்றாள்.

     உள்ளுறை :- புன்னை மலர் கொய்தன போக எஞ்சியவை நெய்கனிந்த காயாகத் தூங்குமென்றது, நீ இதுகாறும் ஏதிலாட்டியரெடுத்த அலரால் வருந்தியது போக, இனிக் கனிந்த நெஞ்சினை யாகி மகிழ்வாய்கா ணென்றதாம். மெய்ப்பாடு - உவகை. பயன் - ஐயந்தீர்த்தல்.