நசைஇ - வேம்பின் ஒள்ளிய பழத்தைத் தின்னுதல் வெறுத்து இருப்பையின் தேன்போலும் பால்வற்றிய இனிய பழத்தை விரும்பி; வைகு பனி உழந்த வாவல் சினைதொறும் நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப - வைகிய பனியிலே உழந்த வௌவால் கிளைகள்தோறும் செல்லுதலால் அவற்றின்மேல் நெய் தோயந்த திரிசுடர் விழுதல் போலத் தண்ணிய பனித்துளிகள் மிகவிழ; நாள் சுரம் உழந்த வாள்கேழ் ஏற்றையொடு பொருத யானை - விடியற் காலையிலே சுரத்திற் சென்று வருந்திய வாள்போலும் நிறமுற்ற வரிபொருந்திய ஆண்புலியொடு போர் செய்த யானையின்; புண் தாள் ஏய்ப்பப் பசிப் பிடி உதைத்த ஓமை - புண்ணையுடைய கால்போலப் பொளிந்தெடுத்துத் தின்ன வேண்டிப் பசிமிக்க பிடியானை உதைத்து மேற்பட்டையைப் பெயர்த்த ஓமையின்; செவ் வரை - சிவந்த அடிமரம்; வெயில்காய் அமையத்து இமைக்கும் அத்தத்து அதர் உழந்து - ஞாயிறெழுந்து வெயில் வீசும்போது விளங்கித் தோன்றா நிற்கும் பாலையின் அருஞ்சுரநெறியிலே சென்று; அசையின் கொல் - வருந்துகின்றனவோ? ஓ - ஐயோ ! எ - று.
(வி - ம்.)உறைத்தல் - மிகவிழல். உறைப்ப இமைக்கும் அத்தமெனக் கூட்டுக.
புலியேற்றையோடு யானை பொருததனைக் கூறுவது போன்று நெறி ஏதமுடையதே யென்று இரங்கினாள். இதுகாறும் கூந்தல்வாரி நுசுப்பு இவர்ந்து ஓம்பியும் சிலம்புகழி நோன்பு யான் காணுமாறு நோற்றிலே னென்பாள் பிறருணக் கழிந்தனளென்று இரங்கினாளாயிற்று.
இறைச்சி :- (1) வேம்பின் பழத்தை வெறுத்து இருப்பையின் பழத்தை விரும்பி வௌவால் வெய்ய பனி உறைப்ப இருக்குமென்றது, தந்தை செல்வத்தை வெறுத்துக் கேள்வனது செல்வத்தை விரும்பி இரவிலே சென்ற என் புதல்வி மாமி, நாத்தூணார் செறிந்திருப்ப எங்ஙன மிருக்குமோ என்றதாம்.
இறைச்சி :- (2) பிடியாலுதைபட்ட ஓமை ஞாயிறு தோன்றியவுடன் விளங்கித் தோன்றுமென்றது, மகளால் வெறுத்து நீக்கப்பட்ட யான் பொழுது விடிந்தவுடன் எல்லாராலுந் தூற்றப்பட்டு எங்குந் தெரியலாயினேன் என்றதாம்.
மெய்ப்பாடு - உவகைக் கலுழ்ச்சி. பயன் - ஆற்றாமை நீங்குதல்.
(பெரு - ரை.) ததர் - செறிவு. யானையின் புண்பட்ட கால்பட்டை உரிக்கப்பட்ட ஓமையின் அடிமரத்திற்குவமை, வாவல் சினைதோறும் சிதர் உறைப்பச் சுரம் உழந்த ஏற்றை எனினுமாம்.
'பிறருழைக் கழிந்த' என்றும் பாடம்.
(279)