பக்கம் எண் :


497


உடைய காதலனுக்கு; உரையாய் குணமோ - உரைத்தாய் இல்லையே! அங்ஙனம் கூறாதது நினக்கு இயல்பாகுமோ? கூறியிருந்தால் முன்னரே அவன்வந்து கூடித் தலையளி செய்திருப்பன்; நீ உள்ளவாறு கூறாமையின் அவனும் வந்திலன்; இவளது நலனும் அழிந்ததுகாண்!; எ - று.

    (வி - ம்.) காலாட்படை சென்னியில் வெள்ளாடை சூடிச்செல்லுதல் அக்கால வழக்காதலின், வெளிய நாரையிருத்தற்கு உவமித்தனர் போலும். நிணத்தை உருக்க நெய்யாமாதலின் நெய்த்தலை யென்றதாம்.

    உள்ளுறை :- மீனருந்த வேண்டிக் கூட்டமாகக் குருகுகளிருத்தல் போல இறைமகன்பால் கிடைக்கப் பெறுவனவற்றைத் தெட்டிக்கொள்ளுதற்கு விறலி முதலானவரொடு கூட்டமாக விருக்கின்றீர்; குருகுகள் படைபோன் றிருப்பினும் படையாகாதன்றே; அங்ஙனம் நீயிர் வாயில்கள் ஆகுந் தண்மையீர் போலிருந்தும் அது செய்யும் வன்மையுடையீரல்லீர் என்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவனைத் தலைவியொடு கூட்டுவித்தல்.

    (பெரு - ரை.) கொழுமீன் அருந்த இனக்குருகு என்புழி அருந்த என்னும் எச்சம் ஆர்ந்த என்னுஞ் செய்த வென்னும் வாய்பாட்டுப் பெயரெச்சத்தின் குறுக்கல் விகாரம்; செயவென்னும் வாய்பாட்டு வினையெச்சம் அன்று. எனவே அதற்குக் கொழுத்த மீனைத் தின்ற நாரையினம் என்று பொருள்கோடலே நேரிதாம். இதனை, "அந்நாற் சொல்லும் . . . . நாட்டல் வலிய என்மனார் புலவர்" என வரும் (தொல். சொல். எச்சவியல் - 7) நூற்பாவானும் அதன் உரையானும் உணர்க. எனவே உள்ளுறைக்கும் மீனைத்தின்ற நாரை மணற்குன்றேறி இருத்தல் போன்று நின் தலைவனும் பரத்தையரை நுகர்ந்து நல்லோன் போன்று ஈண்டு வருவானாயினன் என்பது கருத்தாக்குக. இது மறுப்பாள் போன்று வாயில் நேர்ந்தபடியாம். 'கண்டாங்கு உரையாய் கொண்மோ' என்றும் பாடம்.

(291)
  
    திணை : குறிஞ்சி.

    துறை : இஃது, இரவுக்குறி மறுத்தது.

    (து - ம்.) என்பது, களவொழுக்கத்து இரவுக்குறி வருந் தலைவனைத் தோழி நெருங்கி 'ஐயனே, கரைகளில் யானை பொருதலால் இடிந்து பொன் முதலியன மின்னாநிற்கும்; கான்யாற்றின் கண்ணே முதலை இயங்காநிற்கும்; இத்தகைய நெறியின் ஏதம் நினையாது இராப்பொழுதில் நீ வருதலாலே தலைவி உயிர்வாழாள் கா'ணென இரவுக்குறி மறுத்து வரைவுகடாவா நிற்பது.

    (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்பதனாற் கொள்க.