(து - ம்.) என்பது, களவொழுக்கத்து இரவுக்குறி வருந் தலைவனைத் தோழி நெருங்கி 'ஐயனே, கரைகளில் யானை பொருதலால் இடிந்து பொன் முதலியன மின்னாநிற்கும்; கான்யாற்றின் கண்ணே முதலை இயங்காநிற்கும்; இத்தகைய நெறியின் ஏதம் நினையாது இராப்பொழுதில் நீ வருதலாலே தலைவி உயிர்வாழாள் கா'ணென இரவுக்குறி மறுத்து வரைவுகடாவா நிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்பதனாற் கொள்க.