(து - ம்.) என்பது, களவினொழுகுந் தலைமகன் தலைவியை உடன்கொண்டு சென்றமை செவிலியாலறிந்த ஈன்றதாய் வருந்தி "எம் புதல்வியுடனிருந்த தோழியரை யாம் காணுந்தோறும் நடுங்கி நொந்தொழிதல் போல, எம்மகளை உடன் கொண்டகன்ற காளையாவானை ஈன்ற தாயும் நடுங்கி நொந்தழிவாள் ஆக"வென்று தன் மனையின் கண்ணேயிருந்து மருண்டு கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "தன்னும் அவனும் . . . . . போகிய திறத்து நற்றாய்ப் புலம்பலும்" (தொல். அகத். 36) என்னும் விதிகொள்க.
துறை :(2) அவரிடத்தாரைக் கண்டு சொல்லியதூஉமாம்.
(து - ம்.) என்பது, தலைவனைச் சார்ந்தவரைக் கண்டு சொல்லியதுமாகும்.
(உரை இரண்டற்கு மொக்கும்.) (இ - ம்.) இதுவுமது,
| மணிக்குரல் நொச்சித் தெரியல் சூடிப் |
| பலிகள் ஆர்கைப் பார்முது குயவன் |
| இடுபலி நுவலும் அகன்றலை மன்றத்து |
| விழவுத்தலைக் கொண்ட பழவிறல் மூதூர்ப் |
5 | பூங்கண் ஆயங் காண்தொறும் எம்போல் |
| பெருவிதுப் புறுக மாதோ எம்மில் |
| பொம்மல் ஓதியைத் தன்மொழிக் கொளீஇக் |
| கொண்டுடன் போக வலித்த |
| வன்கண் காளையை ஈன்ற தாயே. |
(சொ - ள்.) மணிக் குரல் நொச்சித் தெரியல் சூடிப்பலிகள் ஆர்கைப் பார்முது குயவன் - நீலமணி போலும் பூங்கொத்தினையுடைய நொச்சிமாலையைச் சூடிப் பலிகளிடுதற்கு அமைந்த கையையுடைய பரிய முதிய குயவன்; இடு பலி நுவலும் அகல்தலை மன்றத்து - தன்னால் இடப்படும் பலியை உண்ணுதற்கு அணங்குகளையும் காக்கைகளையும் அழையாநிற்கும் அகன்ற