(து - ம்,) என்பது, தோழி வரையாது களவின் வழிவந் தொழுகுந் தலைமகனை நெருங்கி, மலைநாடனே! நீ விரும்பிய இவள்பால் வந்து போகுங் களவினை அன்னை அறிவாளேயாயின் இவள்கண் நீர்கலந்து சிவந்து வேறுபாடெய்தி எவ்வண்ணமாக முடியுமோவென அஞ்சி உரையாடுவாளாகி உள்ளுறையால் வரைந்துகொண்டு செல்வாயாகவெனவும் நொந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "களனும் பொழுதும் . . . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.
| நீடுஇருஞ் சிலம்பில் பிடியொடு புணர்ந்த |
| பூம்பொறி ஒருத்தல் ஏந்துகை கடுப்பத் |
| தோடுதலை வாங்கிய நீடுகுரல் பைந்தினை |
| பவளச் செவ்வாய்ப் பைங்கிளி கவரும் |
5 | உயர்வரை நாடநீ நயந்தோள் கேண்மை |
| அன்னை அறிகுவள் ஆயின் பனிகலந்து |
| என்னா குவகொல் தானே எந்தை |
| ஓங்குவரைச் சாரல் தீஞ்சுனை ஆடி |
| ஆயமொடு குற்ற குவளை |
10 | மாயிதழ் மாமலர் புரைஇய கண்ணே. |
(சொ - ள்.) நீடு இருஞ் சிலம்பில் பிடியொடு புணர்ந்த பூம் பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்ப - நீண்ட கரிய மலையிலே பிடியானையொடு கலந்த பொலிவுற்ற முகத்திலே புள்ளியையுடைய களிற்றியானையின் தூக்கிய கைபோல; தோடு தலை வாங்கிய நீடுகுரல் பைந்தினை - மேலிலையகத்தினின்றும் நீண்டு வளைந்த பசிய தினைக்கதிரை; பவளச் செவ்வாய்ப் பைங்கிளி கவரும் உயர்வரை நாட - பவளம்போலச் சிவந்த வாயையுடைய பசிய கிளிகள் கொய்துகொண்டுபோகாநிற்கும் உயர்ந்த மலைநாடனே!; நீ நயந்தோள் கேண்மை அன்னை அறிகுவள் ஆயின் - நீ விரும்பிய இத் தலைவியிடத்து வைத்திருக்கும் களவொழுக்கத்தாலாகிய