| அஞ்சில் ஓதி இவளுறும் |
| பஞ்சி மெல்லடி நடைபயிற் றும்மே. |
(சொ - ள்.) பொன் போல் மேனித் தன் மகள் நயந்தோள் - பொன் போலுகின்ற மேனியையுடைய தன் புதல்வியாகிய இவளுடைய விருப்பத்தின்படி நடத்துபவள் ஆதலால்; தாய் அளியள் - இவளை ஈன்ற தாய் யாவராலும் இரங்கத்தக்காள்; தான் நொந்து அழி அவலமொடு என் ஆகுவள் கொல் - அவள் தான் நொந்து அழிகின்ற அவலமுடனே இனி எவ்வண்ணம் ஆகுவளோ?; அந்தோ கோடு முற்று யானை காடு உடன் நிறைதர நெய் பட்டு அன்ன நோன் காழ் எஃகின் செல்வத் தந்தை - ஐயோ! தந்தங்கள் முற்றிய யானை தனது காட்டில் நிறையப் பெருகியதால் அத்தகைய செல்வமுடைய நெய் பூசினாலொத்த வலிய காம்பு பெருகிய வேற்படை ஏந்திய தந்தையினது; இடன் உடை. வரைப்பின் - அகற்சியையுடைய இடத்தில்; ஆடு பந்து உருட்டுநள் போல - விளையாடுகின்ற பந்தைக் காலால் உருட்டுபவள் போல; ஓடி அம் சில் ஓதி இவள் உறும் பஞ்சி மெல் அடி நடை பயிற்றும் - ஓடியோடி அழகிய சிலவாகிய கூந்தலையுடைய இவளுடைய மிக்க பஞ்சு போன்ற மெல்லிய அடிகள் நடைபயிற்றா நிற்குமே! எ - று.
(வி - ம்.) சாணையாலாகிய மெருகு நெய்பூசினாலொத்தலின் நெய் பட்டன்ன எஃகு என்றார். இனி நெய்பூசிய அத்தகைய வேலெனவுமாம். மெய்ப்பாடு - உவகை. பயன் - பாங்கற்குணர்த்தல்.
இரண்டாந்துறைக்குப் பொன்போன்ற மேனி வாடுமென்று வருந்துவள் ஆதலின் என்னாகுவளோவென்றார். செல்வத் தந்தையின் புதல்வி இங்ஙனம் ஓடுமேயென்றிரங்கி அந்தோவென்றார். பரலில் நடை பயிற்றுமே பஞ்சிமெல்லடியன்றேயென் றிரங்கினாரென்பது. மெய்ப்பாடு - அழுகை. பயன் - ஆற்றாதுரைத்தல்.
(பெரு - ரை.) வேற்படையின் காம்பு முதிர்ந்த கன் மூங்கிற் கோலாகலின் அஃது இயல்பாகவே நெய்பூசப்பட்டது போன்று பளபளப்புடையதாகலின் நெய்பட்டன்ன நோன்காழ் எஃகின் என்றார் என்க.
(324)
திணை : பாலை.
துறை : இது, தோழி செலவழுங்குவித்தது.
(து - ம்,) என்பது, தலைமகன் பொருள்வயிற் பிரிகின்றானைத் தோழி நெருங்கி, எம் பெருமானே! பிரிகின்றனை என்பதறிந்த இவள் கண் நீர்வடியக் கண்டும் கொடிய காட்டில் நீ செல்லுதல் தகுதியாமோ? நும் செலவு தவிர்க என அவன் செலவழுங்கும் வண்ணங் கூறாநிற்பது.